பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்


மாலை வேளை தோறும் தனது அண்ணியார் எதிரே அமர்ந்து பாராட்டி மகிழ, அண்ணன்மார்களுள் ஒருவரான ஜோதிரீந்திர நாத் வீணை வாசிக்க, ரவீந்திரர் பாடல்களைப் பாடிப் பாடி வீட்டாரைப் பரவசப் படுத்துவார்.

பங்கிம் சந்திரா் கருத்து கவர்ந்தது

உலகத்திலும், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்களிலும் வங்காள இலக்கியத்தைப் பற்றி பெரியதோர் மதிப்பும், மரியாதையும் அக்காலத்தில் பரவியிருந்தது. அந்த இலக்கியவாதிகளில் முக்கியமானவரும் பெரும் புகழுக்குப் பாத்திரமானவருமான சந்திர சட்டர்ஜி. மிகச் சிறந்த நாவலாசிரியா்; சிறந்த சிறுகதை மன்னா்; வங்க இலக்கிய உலகில் ஈடும் இணையுமற்றவராக விளங்கினார். பிற்காலத்தில் ‘ஆனந்த ஆஸ்ரமம்' போன்ற பல கதைகள் திரைப்படமாக வந்து இந்திய மக்களைப் பெரிதும் கவர்ந்தன என்பது மட்டுமன்று; இந்திய மக்களையும் பெருமைப்படுத்தின.

அத்தகைய பெரும் எழுத்தாளர், வங்கத்திலே இருந்து வெளிவந்து கொண்டிருந்த “பங்க தாஸன்” என்ற ஒரு வங்க மொழி மாதப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். மக்கள் அக் கதைகளைத் தொடர்ந்து வாங்கிப் படித்து, பங்கிம் சந்திரனைப் புகழ்ந்தார்கள்.

தாகூர் குடும்பமும் அந்தப் பத்திரிக்கையைத் தொடர்ந்து வாங்கிப் படித்து வந்தது. அதனால், பங்கிம் சந்திரருடைய பெருமையை அவர்களும் பாராட்டினார்கள். அந்தப் பத்திரிகையிலே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பங்கிம் சந்திரர் கதைகளை ரவீந்திரர் ஆர்வமாய் உரக்க எல்லாரும் கேட்கும்படி படிப்பார்!