பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

35



‘பங்காதஸன்’ என்ற வங்கமொழி மாதஇதழைப் போலவே, ரவீந்திரரின் தமையன் மார்களுன் ஒருவரான சத்யேந்திர நாத் என்பவர், ‘பாரதி’ என்ற பெயரில் ஒரு மாதப் பத்திரிகையைத் துவக்கினார். சத்யேந்திரர் ஐ.சி.எஸ். பட்டம் பெற்றவர். ரவீந்திரரின் மூத்த அண்ணன் அதற்கு ஆசிரியராக இருந்தார்.

ரவீந்திரர், பாரதி பத்திரிகையில் தமது பாடல்களையும், கதைகளையும், கருத்துக்களையும் எழுதி வெளியிட்டார். பத்திரிகை நிர்வாகக் குழுவிலும் ஒருவராகச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு!

‘பாரதி’ பத்திரிகையில் ஜோதிரீந்தரர் நாடகங்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்த நாடகத்தை அப்போதைய கல்கத்தா நகர மக்களில் சிலர், அவரவர் வீடுகளிலே நாடகமாக்கி நடித்தார்கள். அந்த நாடகத்தை ரவீந்திரரும் தனது இல்லத்தில் நாடகமாக்கி நடித்தார்.

துன்பவியலானாலும் சரி, இன்பியலானாலும் சரி, அல்லது வேடிக்கைப் பகுதியானாலும் சரி, உணர்ச்சியூட்டிடும் பகுதிகளானாலும் சரி, எந்தக் கட்டத்தையும் அதனதன் சுவையுணர்வுகளுக்கு ஏற்றவாறு அவர் நடித்துக் காட்டிப் பாராட்டுப் பெற்றவரானார். ரவீந்திரரின் இந்த நாடகப் புலமைத்திறமை பதினாறு வயதோடு நின்று விடவில்லை. வாழ்நாள்முழுவதும் அவர் இக்கலையிலே ஒன்றி விட்டார்!

இலக்கியம் படிக்க லண்டன் சென்றார்

ரவீந்திரர், பதினான்காம் வயதில் தாயை இழந்தார். தாய் இறக்கும் போது அவருக்கு மரண துன்பம் ஏதும் எழவில்லை. பிறந்தவர் இறப்பது தானே நியாயம் என்ற நினைப்பில்