பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கவியரசா் இரவீந்திநாத் தாகூர்



மாணவர்களின் விரும்பியபடி கல்வி கற்பிக்கும் வழிகளை ஆராய்ந்து தாகூர் அறிவித்தார். விளையாட்டுக் கல்வியிலும் மாறுதல் செய்தார்.

மாணவர்கள் விருப்பப்படி செய்தால், வேலைக்கும் விளையாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் மறையும். வீட்டிற்கும் பள்ளிக் கூடத்திற்கும் இடையே உள்ள வேறுபாடும் அகன்றுவிடும் என்று கவிஞர் தாகூர் எண்ணினார்.

ஆள்வோர் ஆளப்படுவோர் என்ற வேறுபாடில்லாமல் பள்ளியை நடத்தினார். ஆசிரியர்களும்-மாணவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்ச்சிக்குப் பாதை அமைத்தார். அதனால் மாணவர்களும்-ஆசிரியர்களும் பிரச்சினைகள் ஒன்றும் தோன்றதபடி பழகி பாசத்தோடு கல்வி கற்க முடிந்தது.

சாந்திநிகேதன் பள்ளியில், சட்ட திட்ட ஆட்சியும், அடக்குமுறையும் இல்லாமல் செய்தார். அதே நேரத்தில், மாணவர்-ஆசிரியர்கள் இடையே கட்டுப்பாடுகள், ஒழுக்க முறைகள் தவறாதபடியும் பள்ளியை நடத்திவந்தார்.

எல்லார்க்கும் பொதுவான, எல்லார்க்கும் நன்மையான, எவருக்கும் தீமைகள் ஏற்படாத, செயல்முறை ஒழுக்கங்களை வளர வைத்தார். ஒருவேளை இந்த ஒழுங்குமுறைகளிலே யாராவது தவறுவார்களேயானால், அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பை ஒருவரிடமும் அவர் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, மாணவர்களே மன்றம் அமைத்துக் கூடி அவர்கள் நிலைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கலாம் என்ற முறையை கவிஞர் தாகூர் உருவாக்கினார்!