பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. தாகூர் உருவாக்கிய
விசுவ பாரதி,
ஸ்ரீ நிகேதன்

முதல் உலகப்போர் முடிந்ததும், 1918-ஆம் ஆண்டில், கவிஞர் தாகூர் சாந்தி நிகேதனில் விசுவ பாரதி என்ற உலகப் பொது நிலையத்தை, அதாவது உலகக் கலைக் கழகத்தைத் துவக்கினார்.

இந்தியாவில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் எவ்வாறு பழங்காலத்தில் உலகப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டதோ அதனைப் போலவே விசுவ பாரதி உலகக் கலைக் கழகமும மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று கவிஞர் தாகூர் விரும்பினார். அவரது நண்பர்களான ஆண்ட்ரூஸ், பியர்கள் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்திநிகேதனிலேயே தங்கி விசுவபாரதியின் ஆக்கப் பணிகளைக் கவனித்தார்கள்.

கவிஞர் பெருமான் தாகூர் 1920-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த போது, உலகக் கலைக் கழகம் தேவை என்பதின் அவசியத்தை உணர்ந்தார். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களின் கலைகள் அதில் எவ்வாறு இடம் பெற்றுச் சிறந்ததோ, அதேபோல, சீனா, ஜப்பான் முதலான கிழக்கு நாடுகளின் கலைகளையும், ஐரோப்பிய நாடுகளின் கலைகளையும் இடம் பெறச் செய்தார் தாகூர்.