168 கவி பாடலாம்
தரவு என்பது தருதல் என்னும் பொருளை உடையது. அது முகப்பைப் போன்றது. எருத்தம் என்றும் அதற்குப் பெயருண்டு. நான்கு சீர்களை உடைய அடிகளால் வரும், பெரும்பாலும் விளச்சீர், காய்ச்சீர்களால் அடிகள் அமையும், நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் தரவு மூன்றடி முதல் பல அடிகளுடையதாக வரும்.
தாழிசை என்பது தரவினும் தாழ்ந்து இசைப்பதனால் அப்பெயர் பெற்றது. அதற்கு இடைநிலைப் பாட்டு என்றும் ஒரு பெயர் உண்டு. இரண்டடி முதல் நான்கடி வரையிலும் தாழிசைவரும். தரவுக்குள்ள அடிகளைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும்.
தனிச் சொல் என்பது பாட்டின் அடிகளோடு ஒசையில் இசையாமல் தனியே நிற்கும். அதற்கு விட்டிசை, தனிநிலை, கூன் என்ற பெயர்களும் உண்டு.
சுரிதகம் என்ப்து கடைசியில் முடிந்து நிற்கும் உறுப்பு. கலிப்பா வஞ்சிப்பா என்னும் இரண்டிலும் இது வரும். வெண்பாச்சுரிதகம், ஆசிரியப்பாச் சுரிதகம் என்று இரண்டு வகை உண்டு. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று வரும். சுரிதகம் என்பது சுழித்து முடிதல் என்னும் பொருளுடையது. அதற்கு அடக்கியல், வைப்பு, வாரம், போக்கியல் என்றும் பெயர்கள் உண்டு.
இந்த உறுப்புக்களின் பெயருக்குரிய காரணத்தைப் பின்வரும் பழைய சூத்திரம் புலப்படுத்துகிறது.
“தந்துமுன் நிற்றலின் தரவே, தாழிசை
ஒத்தாழ் தலின்அஃ தொத்தா ழிசையே, தனிதர நிற்றலின் தனிச்சொல், குனிதிரை நீர்ச்சுழி போல நின்றுகளிந் திறுதலின் சேர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப.”