மேலாண்மை பொன்னுச்சாமி
103
நடுத்தெருவில் மைக் செட் அலறிக் கொண்டிருந்தது. மூலை மூலைக்குக் கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய குழாய்கள். எல்லார் செவிகளும் அதிர்ந்து கொண்டிருந்தன. பேய்க்கூச்சல், காட்டுக்கத்தல்.
இப்படி மைக்செட் பாடினாலேயே சிறுவர், சிறுமிகளுக்கும் ஒரே கொண்டாட்டம் குதூகலம். ஆவலும் ஆசையுமான எதிர்பார்ப்பு.
பந்திச் சாப்பாடு சாப்பிடலாம். இலைபோட்டுச் சோறு வைப்பார்கள். ரெண்டு, மூன்று கூட்டுகள்... பொரியல்-சாம்பார்.. ரசம்- அப்பளம் எல்லாவற்றையும் விட இனிப்பான விஷயம், பாயாசம் வேறு ஊற்றுவார்கள். வழித்து வழித்து சாப்பிடலாம். தித்திப்பாக இருக்கும்.
கிராமத்துப் பிள்ளைகளுக்கு அனுதினமும் குழம்புக்குக் கூட வழியிருக்காது. விறைப்பான ரேஷன் அரிசிப் பருக்கைகளைத்தான் ‘ருசி பாராமல்’ அள்ளி முழுங்க வேண்டியிருக்கும். இதுதான் கதி.
இந்தப் பிள்ளைகளுக்குப் பந்திச்சோறு என்றால் தனிக் கொண்டாட்டம்தான்... குஷிதான்... அரிதான அதிசயம்தான்.
மைக்செட் பாட ஆரம்பித்துவிட்டாலே, பிள்ளைகளின் தொண்டைக்குள்ளும் மைக்செட் பாடும். உல்லாசப் பாட்டு. அம்மாவை நச்சரிக்கத் தொடங்குவார்கள்.
“எம்மா-எம்மா-நாம ‘அந்த’ வீட்டுக்குப் போறமா?” என்று ஆசை ஆசையாகக் கொஞ்சுவார்கள்.
வடிவையும் ராமசாமி நச்சரித்தான்.
“எம்மா–எம்மா–”