மேலாண்மை பொன்னுச்சாமி
125
“ம், நேரம் எம்புட்டு இருக்கும்?”
“பத்துக்கு மேலே இருக்கும்டா... சரி, கொழைக்கு எங்க போறம்?”
“ராமையா நாடாரு புஞ்சைக்குடா” என்று கோவிந்தன் குசுகுசுத்தான், ரகசியமாக,
ரெண்டு பேரும் போய்க் கொண்டிருந்தனர். ஒருவர் மற்றவருக்குக் கரிக்கட்டையான வடிவமாகத்தான் தோன்றினர். கனத்த இருட்டு. கிள்ளிவிட்டு ஓடுகிறவனைக் கூட காணவிடாத இருட்டு.
அப்போதுதான்-
கோவிந்தன் “டேய் சில்லாண்டி” என்று ரொம்பக் கனிவாகக் கூப்பிட்டான். ‘பேசவா வேண்டாமா’ என்று பலநாள் மனத் தயக்கத்திற்குப் பிறகு, பேசப் போகிறான், இன்றைக்கு. குரலில் அந்தத் தயக்கம், தடுமாற்றம். குழைவு, வெட்டுவதற்கு முன் ஆட்டின் கழுத்தில் போடுகிற மாலை மாதிரியான ஒரு குழைவு.
“என்னடா...கோவிந்தா?”
“நாம ரெண்டு பேரும் ஒண்ணாப்புலேயிருந்து கூட்டாளிக. உசுருக்கு உசுரா பழகுறோம்... போடா, வாடான்னு சர்வ சாதாரணமா பேசிக்கிறோம், இல்லியா?”
“ஆமா.. அதுக்கென்ன?”
“எங்க தெருக்காரங்க என்னை வைதாக. தாறுமாறா இழிவாப் பேசுதாக”
“என்னன்னு?”