10
காகிதம்
“பாக்கியம், நம்ம தெருவுலே ஒன்னும் இருக்காது. இங்கேயே டீகுடிச்சிட்டுப் போயிருவமா?”
“டீயா மாமா?..ம்.. இங்க நல்லாயிருக்குமா?”
“பட்டிக்காடுதான். ஆனா, டீ ரொம்ப ருசியாயிருக்கும்.”
“சரி...சாப்பிட்டிருவோம்.”
டீக்கடை முன் நின்றனர். கடைக்குள் ராமலிங்கமும் மற்ற ரெண்டு மூணு பேரும் எவர்சில்வர் கிளாஸ்களில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். கடைக்கு வெளியே நின்று கொண்டே பூப்போட்ட கண்ணாடி கிளாஸில் டீ உறிஞ்சிக் குடிக்கிற ரெண்டு பேர்.
எல்லார் முகங்களையும் - முக வித்தியாசங்களையும் உன்னிப்பாகப் பார்த்தான், பாக்கியம். அவனுள் ஓடுகிற மர்மமான நினைப்பு.
செபாஸ்டியனோடு டிப்-டாப்பாக வருகிற நகர வாலிபனை வியப்பாகப் பார்த்துச் சிரித்தார், கடைக்காரர்.
“என்ன செபாட்டி-யார் இது?”
“எம் மருமகன், அக்கா மகன். திருச்சியிலே இருக்கான்.”
“அப்படியா?”
“ஆமா சாமி. ரெண்டு டீ போடுங்க. பட்டணத்துப் புள்ளையாண்டான். நல்லாப் போடுங்க.”
“அசத்திருவம்.”
செபாஸ்டியனின் பெருமிதப் பூரிப்பைப் புரிந்து கொண்டு கடைக்காரரும் ஜாலியாகச் சிரித்தார். பூப்போட்ட கண்ணாடிக் கிளாஸ்களைக் கழுவினார்.