மேலாண்மை பொன்னுச்சாமி
15
பாக்கியம் விறுவிறுவென்று நடந்தான். பட்ட அவமானத்தின் கொதிப்பு, அவன் நடையின் வேகத்தில். செய்வதறியாத தவிப்பில் செபாஸ்டியன். கனல்பறந்த இவர்கள் முகங்களைப் பார்த்துவிட்டு... மருமகன் பின்னால் நடந்தான்.
கடையில் ஆள் ஆளுக்குப் பாய்ந்து சீறுகிற குரல்கள், ‘தலை கீழாய் மாறி தறுதலையாகிப் போன காலம்’ பற்றியும், ‘தலையைத் தரையிலே ஊனி நடக்குற எளிய சாதிக்காரங்க” பற்றியும் அனல் பேச்சுகள், கொதிப்பான சொற்கள்.
‘இது எதில் போய் முடியுமோ’ என்ற பயத்தில் செபாஸ்டியன். இத்தனைக்கு மத்தியிலும் மருமகனைப் பற்றிய புதுவகையான பெருமிதம்.
“இதுக்குள்ளே இம்புட்டு விஷயம் இருந்துருக்கா.. இதெல்லாம் தெரியாம... இம்புட்டுக் காலமா வெறும் மண்ணா கெடந்துருக்கமே.”
மனசின் ஆழத்தின் மடியில் சின்னச் சின்ன ஒளிக்கீற்றுகள்.
பாக்கியம் அவனுக்கு நிறைய விஷயங்களை உணர்த்திவிட்டு மறுநாளே போய்விட்டான்.
பத்து நாளைக்குப் பிறகு -
ஒரு பழுப்பு நிற இன்லெண்ட் காகிதம் நடுக்கத்துடன் திருச்சிக்குப் போனது, அந்த ஊரிலிருந்து.
“நீ போன பிறகு இங்க நடந்த கொடுமை கொஞ்சமில்லே. ஊர்ப்பஞ்சாயத்து-வாக்குவாதம்.. அடிதடியாகி- நம்ம வீடுகள் ஏழு சாம்பலாகிப் போச்சு.