18
காகிதம்
கூலி வேலைக்குப் போக வேண்டியவள். நாராயணசாமி நாயக்கர் தோட்டத்திற்குப் பருத்திக்குள் களைவெட்ட வருவதாக வருவதாக ஒப்புக் கொண்டிருந்தவள்தான்.
எட்டு மணிக்குள் ‘வேலைக்குப் புறப்படணுமே’ என்று பரபரத்துப் போய் வேலை பார்த்தாள். அடுப்பு வேலை, அது இது என்று சில்லறை வேலைகள். ரெக்கையடித்துப் பறக்கிற அவசரத்தில் இயங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் -
இந்தத் தீ வந்து செய்தியாகக் காதில் விழுந்தது. வேலக்கா வந்து என்னவோ பேச ஆரம்பித்து, இந்தத் தீயைக் கொட்டிவிட்டுப் போனாள். அந்தத் தீ, மனசு முழுக்க பற்றியெரிந்தது. ஜ்வாலை விட்டெரிந்தது. உடம்பும் மனசும் கிடந்து தகித்தது.
‘சோற்றையள்ளி வாயில் போட்டு விட்டு வேலைக்குப் பறக்கணும்’ என்ற பரபரப்பில் இருந்த விஜயம்... ரெக்கையில் கல்லெறி பட்ட பறவையாக விழுந்து கிடந்தாள். அவளைத் துடிக்க வைத்தது. அவமானத்திலும் அசூயையிலும் மனசே கூசிக்குறுகியது. யாரோ தன்னை மலத்தில் தள்ளி விட்டதைப் போன்ற அருவருப்பு. வெறுப்பு, கசப்பு.
அப்போதுதான் -
“வேலைக்குப் போவமா? வாரீயா?” என்று கேட்டுக் கொண்டு களை சுரண்டியும் தூக்குச் சட்டியுமாக வந்தாள் ராஜம்.
இவள் முகமே எதுவோ மாதிரி விகாரப்பட்டிருந்தது. வெப்ப நீரில் நனைந்த இமை ரோமங்கள், வெட்டுப்பட்ட