40
காகிதம்
அவன் ஒப்புக் கொள்ளாவிட்டால்... இவர்தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்தான் கிடைகாவல்.
மரண விளிம்பில் தடுமாறும் நம்பிக்கைச் சுடர்.
மணிமுத்துவைத் தேடி ஓடினார். அகலித்த முழங்கால்கள். இயல்பு தப்பின தேரின் சாய்வு, எலும்புத் தோலின் நகர்வு.
மணிமுத்து கள்ள முழியாக முழித்தான். தனது காவல் நேரத்தில் தப்பே நடக்கவில்லை என்று சாதித்தான்.
குருவையாக மருகி மருகிக் கேட்டார். உயிரை நாவில் வைத்துக் கேட்டார். தவிப்போடு கேட்டார்.
“சாமி சத்தியமா ஏங்காவல்லே தப்பே நடக்கலே மாமா.”
‘சாமிசத்தியம்’ என்றதும் வாயடைத்துப் போனார், குருவையா. இதுக்குமேல் பேச என்ன இருக்கு?
மணிமுத்துவின் கள்ளமுழியை வெறுப்பும் கசப்புமாய்ப் பார்த்தார். உண்மையைத் தொலைத்த தலைமுறை. நேர்மையையும், நாணயத்தையும் இழந்த தலைமுறை. பெற்ற தாய், தகப்பனுக்குக் கஞ்சி ஊற்றிக் காப்பாற்றுகிற கடமையை வெட்கமில்லாமல் கழற்றிப் போட்ட ஈரமற்ற தலைமுறை.
அவருக்குள்.
தனது ரத்த உயிர்கள். மகன்கள்! உலகமே மகன் மயமாகிவிட்ட மாதிரியோர் பிரமை. வஞ்சனையின் விஷக்காற்றின் முற்றுகை.