இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விரிசல்
ஊருக்குப் புறப்படுகிற பரபரப்பில் இருந்த விநாயகம், ‘இந்தத் தடவையும் ஏதாச்சும் இடைஞ்சல் வந்து சேருமோ?’ என்று பயந்து தவித்தான். பயணம் நின்று போகுமோ என்று பதைத்தான்.
மர்ம முகம் காட்டி இருட்டாக மிரட்டியது ரெண்டு நாள் அனுபவங்கள்.
திருவிழாவுக்குப் போகிற கிராமத்துச் சிறுவனின் மனசைப் போல விநாயகம் ஊருக்குப் போகப் பறந்தான். ஆவலும் ஆர்வமும் அவனுக்கு றெக்கைகளாக முளைத்திருந்தன. தரையில் கால் பாவாமல் அரக்கப் பரக்க அலைந்தான்.
அவனை ஒரு வேடிக்கைப் பொருளைப் போல பார்த்தாள் ராஜம். ஓடியாடி சேட்டை செய்யும் பிள்ளையைப் பார்த்து ரசிப்பதைப் போல, பரிகாசமும் பெருமிதமும் கலந்த குறுஞ்சிரிப்போடு பார்த்தாள், புருஷனை.
“என்ன... மதிய வண்டிக்காச்சும் போயிருவீகளா, போகமாட்டீகளா?”
“இல்லே இல்லே.. இப்ப எட்டு மணி வண்டிக்குப் போயிருவேன்.”