பகலின் மழலைப் பருவமாய் வைகறை. அஞ்சு மணிக்கு வழக்கம் போல் வேதக்கோவில் மைக்செட் முழக்கம்.
அந்தப் பாட்டுச் சத்தத்தில் பாண்டிக்கு முழிப்பு தட்டி விட்டது. கண்ணைத் திறக்க மனசில்லை. புரண்டு புரண்டு படுத்தான். அடித்துப் பிடித்துப் பரபரக்கிற மாதிரி புஞ்சை வேலை எதுவுமில்லை. மனசெல்லாம் நிரம்பி அமுக்கிக் கிடந்த சோம்பல். அசமந்தம்.
முற்றம் தெளிக்கிற மனைவி, புருஷனின் சோம்பலுக்காகத் திட்டுகிறாள். உறங்குகிற பிள்ளைகளையும் அதட்டுகிறாள். ‘சனியன்... இழவு...நாசம்.. மூதேவி’ என்று மங்கலகரமான சொற்கள், அந்த வைகறை இருட்டை அடித்துத் துரத்திக் கொண்டிருந்தன.
நச்சரிப்பு தாளவில்லை. நாற வாசலில் குடியிருந்தாலும் நச்சு (அரிப்பு) வாசலில் குடியிருக்க முடியாது. இது பெரும் தொல்லை.
‘எந்திருச்சிட வேண்டியதுதான். முகத்தைக் கழுவிட்டு, டீக்கடைப் பக்கம் போய் உக்காந்துட்டா... பொழுதைப் பேசியே கழிச்சிரலாம்.’
கண்ணைத் திறக்காமலேயே பெருமூச்சுவிட்ட பாண்டி. நெஞ்சுக்குள்ளிருந்து நெட்டித்தள்ளிக் கொண்டு வந்த கொட்டாவி.