மேலாண்மை பொன்னுச்சாமி
53
அவனுக்குள் நினைக்க நினைக்க பகீர் என்று வந்தது. அடிவயிற்றில் சொருகின மாதிரி ஒரு சூன்யம்.பயப்படபடப்பு. பிடறி நரம்பெல்லாம் பாய்ந்தோடிய பயச்சிலிர்ப்பு.
பாண்டிக்கு நிஜமாகவே பயமும் வெறுப்புமாக இருந்தது. மாறி மாறி- ஆவுடைச்சி முகம். பொட்டில்லாத வெற்று முகம். மூக்குத்தியில்லாத வெறும் நாசி. கம்மல் இல்லாத வெறும் காது. கறுப்புக் கயிறு இல்லாத வெறும் கழுத்து. எல்லாமே.. ‘வெறும்’
‘ச்சேய்..’ என்று வந்தது.
வீட்டுக்குள் போனான். துண்டைத்தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு விருட்டென்று வெளியேறினான். கதவை இழுத்து அடைத்த சத்தத்தில் அவனது கோபம். தரையே ‘தக் தக், தக்’ கென்று அதிர்கிற மாதிரி நடந்த நடையில் அவனது ஆத்திரம்.
“ச்சேய்... இன்னிக்கு விடிஞ்ச நேரமே சரியில்லே. என்னென்ன வினைகள் வந்து சேருமோ.” என்று பயத்தில் உலர்ந்த உதடுகளில் முணுமுணுத்துக் கொண்டான்.
டீக்கடை ஜே ஜே என்றிருந்தது. காலை நேரத்து சம்சாரிகள். நாலா விஷயங்களையும் நாலாவிதமாகப் பேசிக்கொண்டு, பொழுதைக் கரைக்கும் ஆட்கள்.
“ஒரு டீ போடப்பா” என்று சலிப்பான குரலில் சொல்லிவிட்டு-இவனும் ஓர் இடத்தில் உட்கார்ந்தான்.
பாண்டியும் வந்து பேச்சைப் பிடித்தால்... இள மதியம் வரைக்கும் பேசுவான். இருந்த இருப்பில் மூன்று டீ குடிப்பான். மாறி மாறி பீடியைப் பற்ற வைத்து தரையில் தேய்ப்பான்.