மேலாண்மை பொன்னுச்சாமி
57
‘அடடே! இந்த ஆளா’ என்று மனசுக்குள் வியப்புணர்ச்சியின் வியாபிப்பு.
மூன்று மாதத்துக்கு முன்பு-
பாண்டியிடம் ஒரு ஜெர்சிப் பசுவை எண்ணாயிரம் என்று விலை பேசி-ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துவிட்டுப் பிடித்துக் கொண்டு போனவன்.
அந்த ஆயிரம் வருகிற மாதிரி தெரியவில்லை.
பாண்டியும் ஆள் மூலமாக தரகர் மூலமாக கடனை ‘கேட்டுப்’ பார்த்தான். வருகிற மாதிரியான நல்ல பதில் எதுவும் வந்து சேரவில்லை.
‘சரி... போய்த் தொலையுது’ என்று று மனசளவில் வராத கடனாக நினைத்து, வரவு வைத்து தலை முழுகி விட்டான்.
‘ஆயிர ரூபாய் வெலை கொறைச்சு வித்ததாக நெனைச்சுட்டுப் போவோமே’ என்று மனசைத் தேற்றிக் கொண்டான். சமாதானமாக்கிக் கொண்டான்.
அந்த ஆள்தான் இப்போது....
இவனுக்காகக் காத்திருக்கிறான்.
“என்ன அண்ணாச்சி. எப்ப வந்தீக?”
“வந்து அரை மணி நேரமாச்சு. ஒங்களுக்காகத்தான் காத்திருக்கேன்..”
“என்ன வெஷயம்?
“நல்ல வெஷயந்தான்”
“மாடு நல்லா பால் கறக்கா?”
“உங்க புண்ணியத்துலே ஒரு கொறையில்லே. நேரத்துக்கு ஆறு லிட்டருக்குக் கொறையாம... கறக்குது.”