உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

காகிதம்


காயும் பூவுமாக நிறைமாதச் கர்ப்பிணியாக அழகின் முழுமையோடு நிற்கிற காட்சிதான் குதூகலத்தின் ஊற்றாக விளங்கியது.

‘ஆடி மாதத்திலேயே ரவ்வுன்னும் பகலுன்னும் பாராம கம்மா மண்ணு அடிச்சது’ ஞாபகத்துக்கு வந்தது.

‘ஆவணி மாதத்துலே நாற்றுப்பாவி, தண்ணியிறைச்சது’ நினைவில் மின்னியது. ‘அதே மாதத்துலே திரும்பத் திரும்ப மூணு உழவு போட்டு, பூமியைப் புரட்டிப் பருவம் பண்ணுனது’-

ஓடி ஓடி குப்பையடிச்சு நிரத்துனது-

நிலா வெளிச்சத்துலே பாத்தி கட்டினது-

பணத்தைப் பணம்னு பாராம தண்ணியா இறைச்சு கூலியாளுகளுக்குக் குடுத்து நடுவை நட்டுனது, களை வெட்டுனது-

வகை வகையாப் பூச்சி மருந்து வாங்கி அடிச்சது-

உர உப்பு மூடைமூடையாய் வாங்கிக் கொட்டினது, தண்ணிவிட்டது-

எல்லா நினைவுகளும் வாய்க்கால் நீர் பாத்தியில் வந்து மோதுவதைப் போல வரிசையாக மனசுக்குள் மோதியது.

பட்ட பாடுகளில் மலர்ந்த இந்த மண்ணின் மலர்ச்சி அவருக்குப் பெருமிதமாக இருந்தது.

என்னோட ரத்தம், எங்க குடும்பத்தோட வேர்வை.. இங்க, இப்போ, இப்படி பூத்துக் குலுங்குது..

இந்தப் பூரிப்பில் முச்சாமியின் மனம் துள்ளியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/89&oldid=1810280" இலிருந்து மீள்விக்கப்பட்டது