84
காகிதம்
கல்யாணச் செலவுக்குப் பணம் வேணும்... இதெல்லாம் எப்போ செய்ய?
இந்த வருஷமே செஞ்சுட்டா... என்ன! சொஸைட்டிக் கடனையும் மற்ற கடனையும் ‘அப்படியும் இப்படியுமா இழுவி, அடுத்த வருஷத்துக்கு நகட்டி விட்டுட்டா என்ன...ஹூ...!’
இந்த நினைவு சுகமாக இருந்தது. மூச்சு சீராகப் போய் வந்தது. வழி பண்ணி முடித்து விட்டாற்போன்ற சந்தோஷம் மனசை மெல்லிசாகத் தாலாட்டியது. கல்யாணக் கோலத்தில் மகளை மனசுக்குள் பார்க்கிற போது தந்தை உள்ளம் தத்தளித்தது.
அரிவாள்கம்பு ஒரு கையிலும், கிடா மீசையில் ஒரு கையுமாக ஒரு அசுர உருவம் வன்ம வெறியுடன் நெருங்கி வருவதைப் போன்ற பிரமை! “ம் ம்... உடம்புக்கு எப்படி இருக்கு” என்று கரகரத்த உறுமலில் மிரட்டுவதைப் போன்று மனதில் ஒரு தோற்றம்!
பயத்தில் இதயம் ஜில்லிட்டு நடுங்கியது.
மகள் எண்ணெய் வழியும் முகத்துடன் களைச் சுரண்டியுடன் புஞ்சைக்குப் போய்க் கொண்டு இருந்தாள்.
☐☐☐
அந்தச் சிறிய நகரமே தூக்கத்தில் ஆழ்ந்தது, அமைதி கொண்டிருந்த நேரத்தில் - அந்தக் கமிஷன் மண்டிகளில் மட்டும் திருவிழாக் கோலமும், ஆர்ப்பாட்டக் கூச்சலும் தெரிந்தது.
பட்டியில் ஆடுகள் அடைக்கப்பட்டிருப்பது போல், வரிசையற்ற கும்பலாக - நெருக்கமாக வற்றல் மூடைகள்