பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. போரும் வாழ்வும்

உலகம் என்றும் அமைதியில் வாழ்ந்ததில்லை–இனி வாழவும் போவதில்லை என அறிகிறோம். மனிதன் தோன்றிய நாள் தொட்டு–ஏன் ?–உயிரினம் தோன்றிய நாள் தொட்டு ஒன்றை ஒன்று விழுங்கப் பார்க்கும் போராட்டம் நடை பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றது. ஆயினும் வென்றவர் யார் ? தோற்றவர் யார்? விடை காண முடியாது. ஏதோ மேல் போக்காக வெற்றி தோல்வி என்று கூறப்பெறினும் உலக சமுதாயக் கண்ணோடு பார்ப்பின் அவை வெற்றியுமன்று தோல்வியுமன்று என்பது விளங்கும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டே தான் மனிதன் ஒரு தலைமுறையிலேயே பல போர்களை உண்டாக்கிச் செத்து மடிகிறான். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உண்டான உலகப் போரின் ஓய்வு ஓர் இடைக்கால ஓய்வாகவே அமைந்து விட்டது. 1939-ம் ஆண்டு மறுபடியும் உலகப்போர் மூண்டு விட்டது. அப்போது தொடங்கப்பெற்ற தமிழ்க்கலையில் நான் அப்போர் மூள வேண்டிய சூழ்நிலை, காலம், இயற்கை நிலை, நினைத்தால் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு எல்லாவற்றையும் விளக்கி எழுதி இருந்தேன்.

அப்படியே நம்நாட்டில் பிற்காலத்தில் நடைபெற்ற எல்லைப் போராட்டத்தில் (தமிழ்நாடு–ஆந்திரம் பிரிந்த காலை) மேற்கொள்ள வேண்டிய முறை–எல்லை–காரணம் ஆகியவைகளை ஆராய்ந்து புள்ளி விவரங்களோடு வெளியிட்டேன். ஒருசில ஆண்டுகள் கழித்துத் தமிழக ஆந்திர எல்லைகள் இறுதியாக வரையறை செய்யப்பெற்றபோதும், நான் சில ஆண்டுகளுக்குமுன் குறிப்பிட்ட அதே எல்லையில்தான் அவை அமைந்தன. அறிந்த அன்பர்கள் பலர் பாராட்டினர். அப்படியே போர் பற்றி அக்காலத்தில் நான்