பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் வாழ்வும்

117


நானும் அவற்றினிடையே பள்ளிப் பணியையும் போர் மாற்ற அமைதிப் பணிகளையும் ஆற்றிவந்தேன்.

இந்த நிலையில் எனக்கு ஓய்வு அதிகமே கிடைத்தது. வீட்டில் குழந்தை மங்கையர்க்கரசியோடு விளையாடிப் பொழுது போக்குவேன். நேரம் அதிகமாக வீணாவதைக் குறித்துப் பலநாள் எண்ணியதுண்டு. அச்சகத்திலும் பொறுப்பாளர் இருவர் இருந்தமையின் எனக்கு அச்சகப் பணிகள் இல்லை. போரின் காரணமாகத் தாள் தட்டுப்பாடு உண்டாக, தமிழ்க்கலை வெளியீடும் நிறுத்தப்பெற்றது. எனினும் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அந்த நிலையில்தான் மேலே படித்தால் என்ன என்ற எண்ணம் உண்டாயிற்று. 1942-ல் மேலே படிக்கத் திட்டமிட்டேன். எனினும், இடையில் சில ஆண்டுகள் வேறு துறைகளில் கழிந்துவிட்டமையின் படிப்பில் கருத்துச் செல்லுமோ என அஞ்சினேன். அதிலும் ஆங்கிலப் பாடங்கள் அதிகமாகப் பயிலவேண்டியதை நினைந்தேன். ஆரம்பத்தில் கிராமப் பள்ளிகளிலேயே படித்த காரணத்தால் எனக்கு ஆங்கில அடிப்படை இல்லை. எனவே பயிலத் தயங்கினேன். எனினும் சிறிய காஞ்சிபுரத்தில் இருந்த ஓர் ஐயங்கார்–அவர் தனிப்பாடம் சொல்லியே வாழ்பவர் எனக்குத் தந்த உணர்வே படிக்கலாம் என்று தோன்றிற்று. முதலில் இடை நிலை (Inter) வகுப்பு ஆங்கிலத்தில் தேர்ச்சிபெறவேண்டும். அவர் வீட்டிற்கு வந்து அந்தப் பாடங்களையெல்லாம் நன்கு சொல்லிக் கொடுத்தார். நானும் ஒரு மாணவனாகவே இருந்து பயின்றேன். எனவே ஒருமுறை தவறினாலும் அடுத்த முறையில் (செப்டம்பர்) வெற்றி பெற்றேன்.

நான் தேர்வு எழுதிய அந்த நாட்களில் தான் கிழக்கே ஜப்பானியர் பேயாட்டம் தலைவிரித்தாடிற்று. சிங்கப்பூர், மலேயா, பர்மா அனைத்தையும் அவர்கள் விழுங்க, நம் நாட்டு மக்கள் நைந்து வாடி வந்த வகைகளை யெல்லாம் கேட்டுக் கேட்டுக் கண்ணீர் வடித்தேன். சென்னையிலும்