பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
I. முன்னுரை

வாழ்க்கைப் பயணம் நீண்டது–எண்பது கோடி நினைந்து எண்ணுவது– நினைக்க நினைக்க வளர்வது–உற்று நோக்க உணர்வூட்டுவது, என் வாழ்க்கைப் பயணத்தின் ஐம்பத்தைந்தாவது வயதில்–மைல் கல்லில் இன்று நான் நிற்கிறேன். இந்த ஐம்பத்தைந்தாண்டுகளில், அறியா நிலையில் ஐந்தாண்டுகள் கழிந்தனபோக, அரைநூற்றாண்டு எல்லையை எண்ணிப் பார்க்கிறேன். அது என் எண்ணத்தின் அளவு கடந்து அப்பாலே சென்று கொண்டே இருக்கின்றது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் என் இளமையின் நினைவுகளை எண்ணி எண்ணி உருகினேன். அதன் விளைவால் எழுந்தது என் ‘இளமையின் நினைவுகள்’ என்ற நூல். இடையில் பத்து ஆண்டுகள் எப்படியோ–என்னென்ன வகையிலோ உருண்டோடி விட்டன. இன்று மீண்டும் என் கடந்த கால வாழ்வைப் பற்றிச் சிந்தித்துத் தீட்டத் தொடங்கிவிட்டேன். ஆயினும் அதற்கு அடிப்படையாகிய எண்ண அலைகள் எல்லையற்று விரிகின்றன. அவற்றின் இடையில் சிக்கி–தள்ளுண்டு– அலைந்து இதோ என் வாழ்வைத் திரும்பி நோக்கி எழுதத் தொடங்குகிறேன்.

வாழ்க்கை முழுக்க முழுக்கச் சுவையுள்ளது அன்று–அல்லது முற்றும் துன்பத் தொடக்குள்ளதுமன்று. இரண்டும் கலந்ததே வாழ்க்கை, அவரவர் மன அமைதியின் வழியே இன்பதுன்ப எல்லை பெருகவும் சிறுகவும் கூடும். சிலர் இல்லாததையெல்லாம் எண்ணி, எல்லாவற்றையும் ஏதோ இடர்ப்பாடு கலந்ததாகக்கருதி வருந்தி வருந்தி வாழ் நாளைக் கழிப்பர்; சிலர் வள்ளுவர் கூறியாங்கு ‘இடுக்கண் வருங்கால் நகுக’ எனச் சிரித்து, துன்பத்தை ஏற்று அமைதியுறுவர். இன்னும் சிலர் ‘எது வரினும் வருக அலது எது போயினும் போக’ என்று எதற்கும் கவலையுறாது ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ எனும் வகையில் தம்மை மறந்து வாழ்வர். ஆனால் இத்தகையவர் வீழ்ச்சியுற்றாலோ எழுதல், என்றும் இயலாது. அவர்கள் அனைவரும் கடந்த

2