பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணமா? வெறுமணமா?

23



விட்டார்கள் என் அன்னையார். ஆம் ! தேறினால் அங்கே மேலே பயில வாய்ப்பு இல்லை. தேறாவிட்டாலோ மறுபடி படிக்கக் கூடாது. இது என் அன்னையின் ஆணை. 'நான் எந்த ஆண்டு தேர்வில் தேறவில்லையோ அந்த ஆண்டில் வீட்டில் நின்றுவிடுகிறேன்’ என்று வாக்களித்திருந்தேன். எனவே அன்னையார் தன் அன்புளங் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நான் வெற்றிபெறக்கூடாது என்றே ஆண்டவனை வணங்குவார்கள். அவர்களுடைய ஆசை எல்லாம் நான் வீட்டிலேயே அவர்களோடு இருக்கவேண்டும் என்பதுதான். எனினும் பள்ளி இறுதிவகுப்பில் தேறினும் தேறாவிடினும் அதுவே எனது கடைசி படிப்பு என்ற முடிவில் செங்கற்பட்டு வீட்டைக் காலிசெய்துவிட்டோம்.

படிப்பு முடிந்து பதினேழுவயதான நிலையில் நான் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனது பாட்டியும் மறைந்துவிட்டமையின் நானும் அன்னையும் மட்டுமே வீட்டில் தனிமையில் சிலநாட்கள் வாழ்ந்திருந்தோம். ஏதோ ஓரளவு சொத்து உடையவர்கள் என்ற காரணத்தால், எனக்குப் பெண் கொடுக்க நினைத்தார்கள் சிலர். ஒருவர் அதில் தீவிரமாக முயன்றார். பாவம் அவர் பெண்ணின் இளமை நிலையையும்-அதே வேளையில் அவர் தமதுள்ள நெகிழ்வையும் உணராமல் எனக்கு அவர் பெண்ணைக் கொடுக்கத் திட்டமிட்டார். நானும் அப்பெண்ணை அடிக்கடி காணநேர்ந்தமையின் ஓரளவு அவர் திட்டத்துக்கு ஆதரவானேன். எங்கள் எதிர்வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு வீட்டில் குடியிருந்தவரும் இந்தப் பணியில் ஆர்வங் காட்டினர். என்ன அவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து அழைத்துப் போவார். எனது அன்னையார் மட்டும் அவ்வாறு அடிக்கடி ஒருவர் வீட்டிற்குப் போதல் தவறு எனக் கண்டிப்பார். ஆயினும் ஏனோ-இளமையில் அறியா நிலையில் தானோ-நான் அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றேன். அவர் அந்தப் பெண்ணைப்பற்றி அடிக்கடி என்னிடம் பேசுவார். இரண்டொருமுறை என்னை அங்கேயே அழைத்துச் செல்வார்--இரண்டொருமுறை அவர் வீட்டிற்கே பெண்ணை