பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. அண்ணாமலை நகரில்

இதுவரை அன்னை, பாட்டி இவர்தம் பாதுகாப்பில் வாழ்ந்த எனக்குப் புற உலகமே ‘என்னது?-எப்படிப் பட்டது?’ என்பது தெரியாது. எனவே நான் தனியாகப் படிக்கச் செல்லுகிறேன் என்றபோது எனக்கு அச்சமே உண்டாயிற்று. அன்னையாரும் அதனாலேயே அவலமுற்றுக் கண்ணீர் உகுத்தனர். ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வாழும் மக்கள் இன்று இருப்பினும், இன்றும் பெற்ற பிள்ளைகளை விட்டுப் பிரிய மனமில்லாத பெற்றோரும் உள்ளனரன்றே! அதிலும் வேறுயாருமின்றுத் தனியாக அன்னையார் வீட்டில் இருக்க, அவர்தம் ஒரேமகன் எங்கோ படிக்கப்போகிறான் என்றால் உளம் வருந்தாது என் செய்யும்? எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் அம்மாவுக்கு ஆறுதல் கூற, ஒருவாறு மனம்தேறி என்னை அனுப்பி வைத்தார்கள். மாமியார் வீட்டு மக்கள் என்னைப் ‘புற’மெனவே கருதிய நிலை, எனக்குப் படிப்பில் ஊக்க, உண்டி, குடும்பவாழ்வு என்ற உணர்வையே அரும்பச் செய்யாது, படிப்பில் கவனம் செலுத்த வழிகாட்டியாக அமைந்தது. எனவே அவர்கட்கு நான் என்றென்றும் நன்றி உடையவனாவேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் முதல் நிலை வகுப்பில் (Preliminary) சேர்த்துக் கொள்ளப்பெற்றேன். எனினும் நான் முதலாண்டு முழுவதும் சிதம்பரம் மெளனசுவாமிகள் மடத்திலேயே தங்கியிருந்தேன். கல்லூரிக்குச் செல்லும் வழியில் இருந்த துரைசாமிப்பிள்ளை கிளப்பில் தான் நானும் பல மாணவரும் உணவுகொண்டோம். அந்த நாளில் மாதம் ஒன்றுக்கு உணவுக்கு-இருவேளைக்குப் பத்து ரூபாய்-மாணவர்களாகிய எங்களுக்கு எட்டு ரூபாய். காலை ஒன்பதுக்கெல்லாம் நல்ல உணவு பரிமாறப்பெறும். நாங்கள் சாப்பிட்டு 9-15 அல்லது 9-20க்குப் புறப்பட்டு உரிய வேளையில் கல்லூரிக்குச் சென்றுவிடுவோம். பகலுக்கு அங்கிருந்தே இடியப்பம் அல்லது இட்லி மூன்று (அரையணா