பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

காஞ்சி வாழ்க்கை


அவற்றுள் சிறந்தது எது என்பதைக் காரணத்தோடு விளக்குமாறு கேட்டிருந்தார். அதற்கு நான் எழுதிய பதிலைக்கண்டு, அவர் என்னை அவர் அறைக்கு வரவழைத்து நன்கு விசாரித்து, அவ்விடை பற்றியும் விளக்கினார். பின் அவரோடு நெருங்கிப் பழகிய வாய்ப்புகள் பல. இரண்டாம் ஆண்டு நான் தமிழ்மன்றச் செயலாளனாக இருந்தபோது, ‘காக்கா பிடித்தல் கற்றறிந்தோர்க் காகாது’ என்ற பொருளைக்கொண்டு நடத்திய சொற்போர்ப் போட்டியில் அவரே அதை முன் மொழிபவராக இருந்தார். என் கல்வியின் வளர்ர்சியில் அக்கரை காட்டி விளக்கினார். அவரோடு பழகிய அன்பு இறுதிக் காலம் வரையில் நீங்காது நிலைத்து நின்றதோடு, அவருடன் நெருங்கி பழகிய ஒருவனாக மற்றவர் நினைத்து மதிக்கும் வகையிலும் உரியவனாக்கிற்று. அவர் சென்னை வந்த பிறகு, நான் காஞ்சிக்கு அழைத்தபோதெல்லாம் தட்டாமல் வருவார். எனது அன்னையார் மறைந்த நாளன்று அவர் என் கிராமத்துக்கு வந்து ‘தாயும் சேயும்’ என்ற தலைப்பில் பேசி ஆறுதல் கூறித் தேற்றினார். இவ்வாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவரொடுகொண்ட தொடர்பு அவர் தம் இறுதிவரை நிலைத்திருந்தது.

அவர்களைத் தவிர்த்து, சர்க்கரைப் புலவர் என்ற முதுபெரும் புலவர் சிறந்த இலக்கிய விமரிசகராக இருந்தார். எல்லாத் தமிழ்ப் பாடல்களும் அவர் உள்ளத்திருந்து உதட்டில் உருண்டோடிவரும். புராண இதிகாச இலக்கியங்களைப் பல நுணுக்கங்களோடு அவர் நடத்துவார். அவரிடம் பயின்ற அந்தப் பான்மையே எனக்கு அத்தகைய இலக்கியங்களில் ஈடுபாடு உண்டாக்கிற்று. அவர் தம் முன்னோர்கள் இராமநாதபுர அரசரிடம் புலவர்களாய் இருந்தவர்களென்றும் இலக்கிய கடல்கள் என்றும் அறிந்தேன். வயதில் மூத்த அந்தப் புலவர்தம் செறிவு இன்னும் என் கண்முன் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

பொன் ஓதுவார் ஓர் இலக்கணக் கடல், அவர் தோற்றத்தால் எளியர். சாதாரண மல்லில் தைத்த ஒரு