பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

45


னார்கள். மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம் தருவதாகவும் வீட்டில் இருப்பதற்கு அது பொழுதுபோக்காக அமையட்டும் என்றும் காலை வந்து மாலையில் வீடு திரும்புவதால் அன்னை யாரும் தடுக்கமாட்டார்கள் என்றும் தேவையானால் தாமே வந்து அன்னையாரிடமும் சொல்லுவதாகவும் கூறினார்கள். அன்னையார் இசைந்தால் மறுநாளே வந்து பணியை ஏற்குமாறு கூறி, அங்கே உடனிருந்த தலைமை ஆசிரியரிடம் மறு நாள் வந்தால் வேலையில் சேர்த்துக்கொள்ளும்படியும் பணித்துவிட்டார்கள். அதற்கு முன்பே அங்கு திரு. சுவாமிக் கண்ணு என்பார் தமிழரசிரியராக இருந்தமையின் என்னைத் தமிழும் கணக்கும் சில வகுப்புகளுக்குச்சொல்லித் தருமாறும் தலைமை ஆசிரியர் பணித்தார். நான் அனைத்தும் என் அன்னையார் முடிவறிந்த பிறகே எனக் கூறிவந்துவிட்டேன்.

வீட்டில் என் அன்னையாரிடம் இதுபற்றிக் கூறினேன். அவர்கள் முதலில் சிறிது தயங்கினார்கள். பிறகு உத்தரவு தந்தார்கள். வீட்டிலேயே ஒரு வேலையுமின்றி முடங்கிக் கிடப்பதோடு, அமைதியற்ற அவதியுற்ற மணவாழ்வில் உண்டாகும் வேதனையும் பெருகுவதால், அவை நீங்கவும் பொழுது போக்காகவும் இருக்க இசைந்ததாகக் கூறினார். எனவே மறுநாளே நான் இந்துமத பாடசாலையில் ஆசிரியப் பணியினை மேற்கொண்டேன்.

அதுவரை ஆசிரியர்களின் கீழ் மாணவனாக இருந்த நான் அன்று மாணவருக்கு ஆசிரியனாகின்றேன் என்றால் அச்சமாகவே இருந்தது. எனினும் முன்னரே அங்குள்ள ஆசிரியர்கள் உறுதுணையும் தலைமை ஆசிரியருடைய அறிவுரையும் என்னைத் துணிவுடையன் ஆக்கின. அன்று தொடங்கிய ஆசிரியப் பணியே என்னை மெல்லமெல்ல வளர வைத்து, பல்கலைக் கழகப் பேராசிரியனாக்கியும் சிறக்கச் செய்தது. என் வாழ்நாளின் போக்கு அன்றே உறுதி செய்யப்பெற்றது போலும்.