பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

காஞ்சி வாழ்க்கை


எனக்கு ஏழாம் வகுப்பிற்குத் தமிழும் வேறு சில வகுப்புகளுக்குச் சமய பாடமும் ஒரு வகுப்பிற்குக் கணக்கும் தரப் பெற்றன. அப்போது எங்களூர்ச் சேரியிலிருந்தும் சில மாணவர் நான் எடுத்த வகுப்பில் படித்தார்கள். மற்றவர்களைப்போன்று நான் அவர்களையும் ஒத்து நோக்கி, தேவையானால் முதுகில் தட்டி, பாடங்கள் சொல்லித் தருவேன். இது எங்கள் ஊரிலிருந்து வந்து அதே பள்ளியில் படித்தும் பணியாற்றியும் இருந்த ஒருவருக்குப் பிடிக்கவில்லை. எனது அன்னையாரிடம் சொல்லி என்னைக் கண்டிக்குமாறு செய்தார்கள். அன்னையார் கண்டிப்புக்கு அடங்கினேன். ஆயினும் எனது ஒருமை உணர்வு என்றும் விழிப்புடனேயே இருந்தது. எனக்கு அந்த உணர்வை தந்ததே இதே இந்து மத பாடசாலைதானே. இதில் இளமையில் சாதிபேத மற்றும் பழகிய காரணந்தான், பின் சமுதாய ஏற்றத் தாழ்வைக் கண்டு நான் கலங்க வேண்டிய நிலையில் என்னைச் செலுத்தி ஓரளவு சீர்திருத்தக்காரனாக மாற்றிற்று. எனவே அதே பள்ளியில் வேறுபாட்டைக் கற்பித்துக்கொண்டு என்னால் எப்படி வாழ முடியும்? மேலும் அந்த ஆண்டிலேயே அதே பள்ளியில் ஆசியர்களாகச் சேர்ந்த திருவாளர்கள் நா. ப. தணிகை அரசு, இராசவேலு முதலியார் போன்றோர் என் கொள்கைக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இந்துமத பாடசாலையில் நான் ஆசிரியனாக இருந்தேன் என்பதைக் காட்டிலும், நால் பல பாடங்களைக் கற்றுக் கொண்டதால், மாணவனாக இருந்தேன் என்பதே பொருந்துவதாகும். புதிதாகப் பாடம் சொல்லத் தொடங்கிய காரணத்தால் முன்னரே அனுபவம் பெற்ற நல்லாசிரியர்களை அடுத்து, நான் வகுப்பினை நடத்த வேண்டிய வழித்துறைகளை அறிந்து கொண்டேன். மாணவர்களாகிய இளஞ்செல்வங்களை அடிக்காதும் மிரட்டாதும் இனிய சாந்த முறையிலே அழைத்துச் சென்றேன். பள்ளிக்கூடப் பாடங்கள் தவிர்த்து அவ்வப்போது வரும் பெரியார்கள் முன் நடிப்பதற்கும் பாடுவதற்கும் பேசுவதற்குமாகச் சிற்சில நிகழ்ச்சிகளைத் தயார்