பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

73



தான் எனது மக்களில் ஒருவருக்கும் பிறந்தநாள் குறிப்பினைக் கூட நான் வைத்துக்கொள்ளவில்லை. ஆயினும் எனது சோதிடக் குறிப்பில்'-கல்லா வள்ளுவன்’ கால்படி அரிசியும் பழந்துணியும் பெற்று எழுதித் தந்த அந்தக் குறிப்பில் - உள்ள அத்தனையும் கால வேறுபாடும் இன்றி, அப்படியே என் வாழ்நாளில் இன்றுவரை ஒன்றுகூடத் தவறாமல் நடப்பதை எண்ணத் திகைப்பும் வியப்பும் கொள்வேன். எனது அன்னையார் அதைக் கண்டு, அதில் அந்தக் காலத்தில் இடமாற்றம் குறித்திருப்பதால் நான் எப்படியும் வெளியூர் செல்வேன் என்று கூறினார்கள். அதே வேளையில் எனது நண்பர்கள் பலரும்-சிறப்பாக என்னைக் காஞ்சிபுரம் அழைந்துச் செல்ல இருந்த நண்பரும் அன்னைக்கு ஆறுதல் சொல்லினர். காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ளதால் நாள் தோறும் சென்று கூடத் திரும்பலாம் எனக்காட்டினர். (பிறகு அவ்வாறே ஒரு திங்கள் இரெயில் வழி காலை சென்று மாலை திரும்பினேன். பின் எனது சோர்வு கண்டு காஞ்சியிலேயே இருக்கப் பணித்தனர் அன்னையர்). எனவே அன்னையர் இருவரும் ஒருவாறு இசைவு தந்தனர். உடனே காஞ்சிபுரம் சென்றேன்.

அக்காலத்தில் காஞ்சிபுரம், செங்கற்பட்டு, அரக்கோணம் ஆகிய மூன்றிடத்தில் உள்ள பள்ளிகளும் ஒரே அமைப்பின் கீழ் (Church of Scotland Mission) இருந்தன' U. F C. M. உயர்நிலைப்பள்ளி என்றே அவற்றிற்குப் பெயர். பின்னரே அவை தனித்தனியாகப் பிரிந்து காஞ்சிப் பாட சாலை 'ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளி' எனப் பெயர் பெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை ஒருநாள் காலை அவர் வீட்டில் என் நண்பருடன் சென்று கண்டேன். என்னைக் கண்டதும் அவர் பலநாள் பழகியவர் போன்று அன்புடன் ஏற்று இன்சொற் கூறினர். அவர்தம் அன்பும் ஆதரவும் அப்பள்ளியில் பணியாற்றிய கடைசி நாள்வரை எனக்கு இருந்தன. அவர் உடனே என்னைப் பணியை ஏற்றுக் கொள்ளச் சொன்னார். பள்ளி திறந்த நாளிலேயே சேர்ந்து