பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1௦

காட்டு வழிதனிலே

 எல்லா மனிதர்களும் சமமென்ற கொள்கையைச் சமூக வாழ்க்கையில் நிறுவும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலியவை நீங்கமாட்டா என்கிறார் பாரதியார்.

உலகத்தில் இன்பம் நிலைக்கும் நெறியை இந்தியாவே நிலைநாட்ட முடியும் என்பது பாரதியாருடைய நம்பிக்கை. காந்தி மகானுடைய கொள்கைகளே பாரதமாதாவின் உபதேசம் என்றும், அவற்றாலேயே உலகத்திற்கு உய்வு ஏற்படும் என்றும் குறிப்பாகக் காட்டும் பாட்டு ஒன்றைப் பாரதியார் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அதில் ஒரு பகுதி வருமாறு :

வருக காந்தி, ஆசியா வாழ்வே,
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்,
ஆன்மா அதனால் ஜீவனை யாண்டு
மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்,
பாரதநாட்டின் பழம்பெருங் கடவுளர்
வீரவான் கொடியை விரித்து நீ நிறுத்தினாய்
மானுடர் தம்மை வருத்திடும் தடைகள்
ஆனவையுருகி அழிந்திடும் வண்ணம்
உளத்தினில் நீகனல் உறுத்துவாய் எங்கள்
காந்தி மஹாத்மா, நின்பாற் கண்டனம்
மாந்தருட் காணநாம் விரும்பிய மனிதனை
நின்வாய்ச் சொல்லில் நீதிசேர் அன்னை
தன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்
தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம் யாம்
எழுந்தோம், காந்திக் கீந்தோம் எமதுயிர்.

இவ்வாறு பாரதியாருடைய வாக்கினில் நாம் போற்றி மனத்திற் கொள்ளவேண்டிய உயர்ந்த கருத்துக்கள் பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் அறிந்துகொள்வது முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.