பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

காட்டு வழிதனிலே

இல்லையா என்ற விஷயத்தை நான் இங்கே ஆராயப் போவதில்லை. அவ்வாராய்ச்சியின் முடிவு எவ்வாறாயினும் இது என் கட்சியைப்பாதிப்பதில்லை என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒருவனுக்கு ஏதாவது ஒரு துன்பம் நேருமானால் "அது என் தலைவிதி" என்று அவன் சொல்லிக் கொள்கிறான். விதியென்று சொல்லிவிட்டு அதன் காரணத்தை ஆராயாது வாளா இருக்கிறான். அத் துன்பத்தைப் போக்க வழி தேடவும் அவனுக்கு உற்சாகயேற்படுவதில்லை. விதியை மாற்ற முடியாது என்றால் அதைப்பற்றி வீண் சிரமப்படுவானேன் என்று நினைக்கிறன். ஆனால், உண்மையில் விதியென்றால் என்ன என்பதை அவன் ஆராய்வதில்லை.

விதியென்ற சொல்லுக்கே தலையெழுத்து என்ற பொருளில்லை. விதி என்பது ஒரு நியதி; ஒரு சட்டம், தீயைத் தொட்டால் சுடும். இது ஒரு நியதி. இந்த விதியை மாற்ற முடியாதுதான். ஆனால் தீயை அணுகாது இருந்துவிட்டால் அது யாரையும் சுடமுடியாது. ஒருவன் தன் வாழ்க்கையில் தவறு செய்தால் அதன் பயனைத் திண்ணமாய் அனுபவித்துத்தான் தீர வேண்டும். அதற்குத் தப்ப முடியாது. அதுதான் விதி. ஆகவே, ஒருவன் தன் விதியைத் தானே எழுதிக் கொள்ளுகிறான் என்பதில் தவறு ஒன்றுமில்லை.

பாரம்பரியத்தால் சில தன்மைகளும், உடல் நிலைமையும் ஏற்படுகின்றன. குழந்தைப் பருவத்திலே ஏற்பட்ட அனுபவங்களினாலும், சூழ்நிலையாலும் சில தன்மைகளும், உடல் நிலையும் உருவாகின்றன.