பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

காட்டு வழிதனிலே


கைகளை நீட்டி உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தழுவிப் புத்துயிர் கொடுத்துத் தகதக வென்று மேலே கிளம்பும் இளங் கதிரவனையும், வெண்மதுக் கதிர்களால் நிவவுலகைச் சொக்கி மயக்கிப் புன்னகை பூத்துத் தழைக்கும் தண்ணிலவையும், குழந்தைச் சிரிப்பினில் குழையும் இனிப்பையும், மாறாக் காதல் வெற்றியெய்துங் காலத்தில் பிறக்கும் களிப்பையும் துய்ப்பதுபோலப் பிறருக்குக் கூற முடியுமா? அடைய முடியாததை அடைந்த இன்பம்-பிரியமுடியாதவர்களைப் பிரிந்த துன்பம்- இவற்றைப் பேச முடியுமா? இன்ப வாரிதியாகிய இறைவனைக் கலந்த நிலையில் உதிக்கும் உயரின் பத்தைச் சொல்லில் சிறைப்படுத்தலாகுமா?

இவற்றையெல்லாம் கலைஞன் மற்றவர்களைவிட நுட்பமாக உணர்வதோடு தன் அற்புத வல்லமையினால் பிறருக்கும் தோன்றும்படி செய்ய முயல்கின்றான். அவனுடைய முயற்சிக்கு ஓய்வே இல்லை. ஆதிமனிதன் தன் உணர்ச்சிகளைப் பலவகையான ஒலிகளால் வெளிப்படுத்த முயன்றான்; குகைகளில் படம் வரைந்து காண்பிக்க விரும்பினான். அன்று முதல் இந்த முயற்சி நடந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு பெருங்கலைஞனும் ஒவ்வொரு துறையில் - அவ்வுணர்ச்சிகளை எடுத்துக்காட்ட ஆர்வங்கொள்ளுகிறான். சிற்பி கல்லிலே வடிக்கப்பாடுபடுகிறான். ஓவியன் வண்ணங்களிலே கட்டிப் பிடிக்க முயல்கிறான். இசை வாணன் நாதத்திலே எட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். கூத்தன் அவிநயத்திலே மின்னும்படி செய்ய முயல்கிறான். கவிஞன் சொல்லிலும்