108 காதலும்கல்யாணமும்
இல்லாவிட்டால் மகாபலிபுரம் பஸ்ஸைத் தவற விடுவதற்கு அந்த முன் யோசனை இவனுக்கு உதவி யிருக்குமா? இல்லை, பொழுது போக்குக்கென்று ஒட்டலில் அறை எடுக்கத்தான் அந்த முன் யோசனை இவனுக்கு உதவியிருக்குமா?
நல்லவேளை, மணி அண்ணன் மட்டும் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், என் கதி என்னவாகியிருக்கும்?
எனக்குத் தெரியாமல் என் கதி ஒன்றும் ஆகியிருக்காதென்றாலும், ஊர் சிரிக்கும் அளவுக்கல்லவா அந்தக் கிராதகனுடன் நான் போராடவேண்டியிருந்திருக்கும்?
இப்போது மட்டுமென்ன, ஊர் சிரிக்காவிட்டாலும் என் உள்ளமே என்னைப் பார்த்துச் சிரிக்கிறதே! இனி நான் அந்த மணி அண்ணன் முகத்தில் எப்படி விழிப்பேன்? என்னுடன் இருந்த ‘புண்ணியாத்மா யார் என்று கேட்டால், என்னவென்று சொல்வேன்?
இனி அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்னுடன் இருந்தவனைப் பற்றித்தான் என்ன நினைப்பார்?
இது ஒரு வேளை அவரால் அப்பாவுக்குத் தெரிந்தால், அம்மாவுக்கும் தெரிந்தால், அண்ணாவுக்குத் தெரிந்தால், அவர்கள்தான் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
அவர்கள் என்ன நினைப்பார்களோ என்னமோ, அந்த நினைப்பே எனக்கு வேதனையாயிருக்கிறதே!
இனி என் விளையாட்டு, வேடிக்கையெல்லாம் அந்த வேதனையோடு வேதனையாக வேண்டியதுதானா?-அடப் பாவி, இதற்கா உன்னை நான் காதலித்தேன்?
‘காதலிப்பவர்கள் சிரிப்பதற்கு மட்டும் தயாராயிருந்தால் போதாது; கண்ணிர் விடுவதற்கும் தயாராயிருக்க வேண்டும்’ என்பது என்னமோ எனக்கும் தெரிந்ததுதான்; ஆனால் அந்தக் கண்ணிரை இந்த நிலையிலா விடுவது, நான்?