பக்கம்:கானகத்தின் குரல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 17 தொடங்கினேன். ஆனால் இது நாலாயிரம் வார்த்தைகளில் அடங்காமல் முப்பத்திரண்டாயிரம் வார்த்தைகளுக்கு ஓடிவிட்டது. பட்டார்டு என்ற கதையில் ஒரு தீய நாய்க்கும், ஒரு தீய மனிதனுக்குமிடையே மூண்ட பகைமையைப் பற்றிக் கூறுகிறார். அந்தப் பகைமையால் நாயும், மனிதனும் முடிவில் இறக்கிறார்கள். இந்த நூலில் மிகச் சிறந்த நாயைப் பற்றி அவர் கூறுகிறார். பக் என்பது உண்மையாகவே வாழ்ந்த ஒரு நாயின் பெயர். சான்டா கிளாராவில் உள்ள ஒரு பண்ணையில் அதை பாண்ட் என்ற நீதிபதி வளர்த்தார். நீதிபதியின் மகனான லூயி பாண்ட் என்பவர் அதை யூக்கான் பிரதேசத்துக்குக் கொண்டு சென்றார். டாஸ்னில் அவர் ஜாக் லண்டனுக்குப் பழக்கமானார். பாண்ட் கொண்டு வந்திருந்த நாயை ஜாக் மிகவும் விரும்பினார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்த நாயே கானகத்தின் குரல் என்ற நூலில் முக்கிய பாத்திரமாக அமைந்தது. ஜாக் லண்டன் இறந்து முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுதிய ஐம்பது நூல்களில் பெரும்பாலானவற்றை மக்கள் மறந்துவிட்டார்கள். திறனாய்வாளர்களுள் காலமே சிறந்தது. அது தூங்காமல் வேலை செய்து மதிப்பிடுகின்றது. காலப்போக்கில் பல நூல்களை மக்கள் மறந்துவிட்டாலும், கானகத்தின் குரல், கடல் ஒநாய், மார்ட்டின் ஈடன்போன்ற நூல்களும், இருபது முப்பது சிறுகதைகளும் என்றும் அவர்கள் நினைவில் இருக்கும். இருபதாண்டுகளில் ஐந்தாறு சிறந்த நூல்களை எழுதியிருந்தால் அதுவே எந்த எழுத்தாளனுக்கும் சிறந்த வெற்றியாகும். மேலே குறிப்பிட்ட நூல்களெல்லாம் ஜாக் லண்டனுடைய வாழ்க்கையின் முற்பகுதியான சுமார் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் காணப்படும் திறமையும், சக்தியும், உற்சாகமும், ஸ்நார்க் பிரயாணத்திற்குப் பின்பு எழுதப்பட்ட நூல்களில் குறைந்து காணப்படுகின்றன. மனோபாவனைத் திறமையாலும் கதையும் கருத்துக்களும் தங்கு தடையின்றிச் செல்லும்படி அமைக்கும் ஆற்றலாலும் கதையைக் கற்பனை செய்வதற்கு வேண்டிய இயற்கைத் திறமையாலும் ஜாக் லண்டனுக்கு இக்கால அமெரிக்க இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஸ்தானம் கிடைத்துள்ளது. -ப்ராங்க் லூதர் மாட்