பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

537

கங்கை எப்படி வந்தது? தலையெடுப்பாக அலைகள் வீசிச் சீறிக் கொண்டு வந்தது. விண்ணுக்கு அடங்காமல், வெற்புக்கு அடங்காமல், வந்தது.

அது இப்போது பெட்டிப் பாம்பாக இறைவன் சடையில் அடங்கியிருக்கிறது. அங்கே உள்ள பொருள்களை அது இழுத்து அதற்குள்ளேயே அலை வீசிக் கொண்டு நிற்கிறது. ஆற்றின் இயல்பு அது.

சீறி விழித்துப் படரும் ஒளியையுடைய அரவம் கங்கையின் அருகிலே இருக்கிறது. சில சமயங்களில் அலைகளை வீசி அதை இழுத்து ஒலியுடன் ஓடுகிறது. இறைவன் திருமுடி பரந்து விரிந்தது; ஆதலால் அங்கே அதனனால் ஓட முடிகிறது. அங்குள்ள பாம்பையும் சந்திரனையும் இழுத்துக் கொண்டு அலைகள் ஒலியை எழுப்ப ஓடுகிறது கங்கை.

சீறி
விழித்துஊரும் வாள்அரவும்
வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்து ஓடும் கங்கைத் திரை.

அவ்வாறு ஓடினாலும் சடையின் எல்லையைக் கடவாமல் இருக்கிறது கங்கை. குண்டு சட்டியில் குதிரையை ஓட்டுவது போல அந்த இடத்தில் தன் ஆற்றலைக் காட்டுகிறது.

சரி, அடங்கிக் கிடக்காமல் சிறைப்பட்டது போல இறைவன் சடையில் இருக்கும்போதும் தன் இயல்பு மாறாமல் அலைகளை வீசி ஓடும் கங்கை இப்படியே இருக்குமா? கன்னம் போடும் திருடன் சிறையையும் உடைத்துக் கொண்டு வெளியேற முயல்வானே! அது போல இப்போது சடைக்குள்ளே இருக்கும் கங்கை திடீரென்று புரட்சி செய்யப் புகுந்து இறைவனுடைய சடையையும் மீறி மேலே வெள்ளமாகப் பெருகினால் என்ன செய்வது? இறைவன் அப்போது என்ன செய்வான்?