பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544

திரைமருவு செஞ்சடையான்
சேவடிக்கே ஆளாய்.

இறைவனுடைய திருவடித் தொண்டைப் புரிவதோடு அவனுடைய புகழைப் பேசும் வாய்ப்பும் அம்மையாருக்குக் கிடைத்தது. அவருடைய உடம்பு இறைவன் அடிக்கீழ்ப் பணித்து நின்றது; அவருடைய வாக்கு இறைவனைப் பற்றியே பேசியது; அவன் புகழைப் பாடியது. அந்தப் பாடல்களை இன்று நாமும்ஓதி இன்புறுகிறோம்.

உரைமருவி.

இறைவனுடைய புகழை உரையிலே பொருந்தப் பாடும் அம்மையாருக்கு மெய்ஞ்ஞானம் உண்டாயிற்று. அவருக்கு நல்லுணர்வு பிறந்தது.

அந்த உணர்வினால் மெய்ப்பொருள் இன்னதென்பதை உணர்ந்தார். உலகியல் வாழ்வை அவர் தியாகம் செய்து உதறி விட்டாலும் இந்த மெய்ஞ்ஞான வாழ்வை அவர் பெற்றார் . அதைப் பெருமிதத்தோடு சொல்கிறார்.

உரைமருவி, யாம் உணர்ந்தோம்
கண்டீர்!

தம்மைப் புறங்கூறும் மக்களுக்குச் சொல்வது போலச் சொல்கிறார். போலியான புற வாழ்க்கையின் ஆடம்பரங்களைக் கண்டு மெச்சி மகிழும் உலகியலுள்ளம் படைத்தவர்களுக்கு இந்த அருமைப்பாடு தெரியாது. அவர்கள், அம்மையார் தம் வாழ்வை இழந்துவிட்டார் என்று பேசினார்கள். பாவம்! அவர்களுக்கு என்ன தெரியும்? "இதோ பாருங்கள்; இதை உணர்ந்து கொள்ளுங்கள். உடல், உரை, உள்ளம் என்னும் மூன்று கரணங்களும் இறைவனோடு இணைந்த பேரின்ப வாழ்வல்லவா எமக்குக் கிடைத்திருக்கிறது? இதைத் தெரிந்து கொள்ளாமல் புறம் உரைக்கிறீர்களே! எமது நிலையை நீங்கள் நன்றாக அறிந்து கொள்ளுங்கள்" என்கிறார்.