பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

543

இவ்வாறு அம்மையார் பாடுகிறார்.

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாம்உணர்ந்தோம் கண்டிர்:— தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே,
எம்மைப் புறம் உரைப்பது ஏன்?

'உலகியலில் ஈடுபட்டு எம்மைப்பற்றிப் பழி கூறுகிறவர்களே, கங்கை பொருந்திய செம்மையான சடையை உடைய சிவபெருமானுடைய செம்மையான திருவடிக்கே ஆளாகி, அவனைப் பற்றிய உரைகளையே உரைத்து, அவனை யாம் உணர்ந்தோம்; இதைப் பாருங்கள்; இந்த நிலையை அறிந்துகொள்ளுங்கள். இகலோக வாழ்வுக்கும் அடுத்த வாழ்வுக்கும் உரிய எல்லா நலன்களும் அமையப் பெற்றோம்; அப்படி இருக்க, எம்மைப் புறத்தே நின்று பழி கூறுவது ஏன்?"

[திரை–அலை; இங்கே கங்கைக்கு ஆயிற்று; ஆகுபெயர். செஞ்சடையையும் சேவடியையும் நினைத்து முடி முதல் அடி வரையில் எண்ணிப் பார்க்கிறார். உரை-இறைவனுடைய புகழ். உணர்ந்தோம்– அவனே மெய்ப்பொருள் என்பதை அநுபவத்தில் தெளிந்தோம். ஆளாவது மெய்யின் செயல்; உரை மருவியது வாக்கின் செயல்; உணர்ந்தது மனத்தின் செயல். ‘மூன்று கரணங்களாலும் அவனுடைய தொடர்புடையோம்’ என்றார். கண்டீர், தெரிமின் என்பவை குறை கூறுவார்களை நோக்கிச் சொன்னது; ஓ: அசை நிலை. அமைந்தோமே: ஏகாரம்: அசை. புறம் உரைப்பது-நேர்நின்று சொல்லத் தைரியம் இல்லாமல் புறத்தே நின்று பழி கூறுதல். என்–என்ன பேதமை!

‘ஆனாய், மருவி, உணர்ந்தோம், புறம் உரைப்பது என்?’ என்று முடிக்க.]

இறைவனை வழிபட்டு வாழ்பவர்களுக்கு இம்மையிலும் அம்மையிலும் நிறைவான வாழ்வு அமையும் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் உள்ள 91-ஆவது பாடல் இது.