பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546

தன்னை அறியாத தன்மையனும்

என்று சொல்கிறார்.

அப்படி உள்ளவன் யார்? நுட்பமாகச் சொன்னார் முதலில். என்னை உடையான் என்றும், ஏகமாய் நின்றான் என்றும், தன்னை அறியாத தன்மையன் என்றும் சொல்லி விட்டு அவனை இனம் கண்டுகொள்வதற்கு அடையாளம் காட்டுகிறார்.

அவனுடைய சடையைப் பற்றிச் சொல்கிறார். போன பாட்டில், 'திரைமருவு செஞ்சடையான்' என்று சொன்னவர் அந்த எண்ணத்தோடே பேசுகிறார். அங்கே 'செஞ்சடையான்' என்று மட்டும் சொன்னார். இங்கே சற்று விளக்கமாகச் சொல்கிறார்.

அது செம்பொன்னைப் போல ஒளிர்கிறது. செம்பொன்னைச் சுருள் சுருளாக வைத்தால் எப்படி இருக்கும்? அப்படி அவனுடைய தூய சடை தோற்றம் அளிக்கிறது.

பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான்.

அந்தச் சடையை, 'தூச்சடை' என்கிறார். அகங்கரித்து வந்த கங்கையின் அகங்காரத்தைப் போக்கித் தூயதாக்கிய சடை அது. சாபமேற்ற சந்திரனைத் தூயவனாக்கிப் புனைந்த சடை அது. ஆகவே தூய சடையாயிற்று.

அவன் வானவர்களுக்கு அருள் பாலிக்கிறான். அவர்கள் தன் அருளைப் பெற்றுத் தம் தம் கடமைகளை முறையாக ஆற்றும்படி செய்கிறான். தன்னுடைய அருளை அவர்களுக்கு ஆகும்படி திருவுள்ளங் கொண்டு வைக்கிறவன் அவன். அவர்கள் அடியவர்களைப் போலச் சிறந்த தகுதியைப் பெறா விட்டாலும் உலகம் நடைபெறுவதற்காக அவர்கள் தம் தொழிலைச் செய்ய வேண்டுமாதலின் அவர்களுக்குத் தன் அருளைத் துணையாக வைத்திருக்கிறான். அடியவர்கள் குழந்தை போன்றவர்கள். அவர்களிடத்தில் இயல்பாக இறைவனுக்கு அன்பு சுரக்கிறது. அவர்களைத் தன் உடைமை