பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

555

பொருப்பன் மகள்
மஞ்சுபோல் மால்விடையாய், நிற்பிரிந்து வேறு இருக்க
அஞ்சுமோ சொல்லாய், அவள்.

‘ஒன்று, உன்னுடைய திருவுள்ளம் காரணமாக இந்த இணைப்பு அமைந்திருக்கவேண்டும்; அல்லது, அந்தப் பெருமாட்டியின் உள்ள நிலை காரணமாக அமைந்திருக்க வேண்டும். இந்த இரண்டில் எது உண்மையான காரணம்? இதை எனக்குச் சொல்லியருள வேண்டும்’ என்று விண்ணப்பிக்கிறார் அம்மையார்.

“மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலை விடையாகக் கொண்டவனே! நீ பார்வதியிடம் கொண்ட பெருங்காதலால் அவளைப் பிரியும் ஆற்றல் இல்லாதவனக இருக்கிறாயோ? அன்றி உன்னை விட்டு வேறாக இருக்கும் இடம் பிறிது அவளுக்கு இல்லையோ? என்ன காரணம்? அந்தப் பார்வதி உன்னைப் பிரிந்து வேறாக இருக்க அஞ்சுவாளோ? இதை எனக்குச் சொல்வாயாக.”

விருப்பினால் நீபிரிய கில்லாயோ? வேறா
இருப்பிடம்மற்று இல்லையோ என்னோ?—பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய், நிற்பிரிந்து வேறுஇருக்க
அஞ்சுமோ? சொல்லாய், அவள்.

[விருப்பு—காதல். பிரியகில்லாயோ—பிரிவதற்கு ஆற்றல் இல்லாமல் உள்ளாயோ? கில்—ஆற்றலைக் குறிக்கும் இடைச்சொல். வேறா—உன்னை விட்டு வேறாக. மற்று—பிறிது; அசையாகவும் கொள்ளலாம். என்—என்ன காரணம்? ஓ: அசை. பொருப்பன் மகள்—இமாசல அரசனுடைய பெண்; பார்வதி. நிற்பிரிந்து—நின்னைப் பிரிந்து. பொருப்பன் மகளாகிய அவள்]

'உன்னுடைய திருவுள்ளம் காரணமாகவா, இறைவியின் உள்ளக் கிடக்கை காரணமாகவா இந்த இணைப்பு அமைந்தது?" என்று கேட்கிறார்.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 94-ஆவது பாட்டு.