பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

566

அகப்படாத பொருள் ஏதும் இருப்பதில்லை. எங்கே பார்த்தாலும் தீயே நிறைந்து தன் வேலையைச் செய்கிறது. அவ்வாறு தீயை மூளவிட்டு இந்த உலகங்களை அவன் எரித்து விடுகிறான்.

இவ்வாறு உலகையே அழித்துச் சுடரும் அந்த அக்கினி பிறகு அடங்கிவிடுகிறது. பிரபஞ்சம் மீண்டும் தோற்றுகிறது. மறுபடியும் உலகத்தில் உயிர்கள் பிறக்கின்றன. எரிந்த சோலை மீண்டும் தழைத்து அடர்ந்து வளர்வது போல உலகம் மறுபடியும் உயிர்கள் வாழும் இடமாக அமைந்து காட்சி அளிக்கிறது. பிரளயகாலத்தில் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எரித்த அந்தத் தீ என்ன ஆயிற்று? மறுபடியும் பிரளயம் வந்தால் அது எழுந்து பரந்து தன் வேலையைச் செய்ய வேண்டுமே; இப்போது அது எங்கே போயிற்று?

ஒருகால் அந்தப் பெரிய தீயை உலகம் ஏழிலும் அங்கங்கே மறைத்து வைத்திருக்கிறானோ? கோட்டைக்குள் மறைந்து நின்ற வீரர்கள் போர் வந்தால் திடீரென்று மறை இடத்திலிருந்து எழுந்து வந்து போர்க்களத்தில் புகுந்து அமர் செய்யப் புகுவார்களே, அது போல அந்தத் தீ மீண்டும் பிரளய காலம் வரும்வரை அங்கங்கே மறைந்திருக்கிறதோ? அதை இந்த ஏழுலகத்திலும் மறைத்து வைத்திருக்கிறானோ இறைவன்? இந்தக் கேள்வியை இறைவனிடமே கேட்கிறார் காரைக்கால் அம்மையார்.

மறைத்து உலகம்
ஏழினிலும் வைத்தாயோ?

உலகத்துக்குள் மறைந்திருந்து வேண்டும்போது வெளிப்படும் அந்தத் தீ உலகம் ஜலப் பிரளயத்தில் அமிழ்ந்து போகும்போது அதுவும் அமிழ்ந்து அணைந்து போகாதா? அழிக்கும் பொருள் அழிக்கப்படும் பொருளுக்குப் புறம்பே இருந்தால்தான் எளிதில் அழிக்க முடியும். ஆகையால் அந்தச் செந்தீ அழல் பிரபஞ்சத்துக்கு அப்பால் வேறு ஓரிடத்