பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

563

மறைத்துஉலகம் ஏழினிலும்
வைத்தாயோ? அன்றேல்
உறைப்போடும் உன் கைக்
கொண்டாயோ?—நிறைத்திட்டு
உளைந்துஎழுந்து நீ எரிப்ப
மூவுலகும் உள்புக்கு
அளைந்துஎழுந்த செந்தீ அழல்.

‘எம்பெருமானே, சர்வப் பிரளய காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நின்று சீறி எழுந்து நீ எரிப்பதனால் மூன்று உலகங்களிலும் கலந்து பொங்கி எழுந்த பிரளய காலாக்கினியாகிய செம்மையாகிய தீயின் கொழுந்துகளை மற்றக் காலங்களில் இந்த உலகம் ஏழினிலும் மறைந்து வைத்தாயோ? அல்லாமல் அதனை அதன் வெம்மையோடும் நின் திருக்கரத்தில் பாதுகாத்து வைத்தாயோ? இதனை எனக்குச் சொல்லியருள வேண்டும்.

[உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ என்று கூட்டுக. உறைப்பு—வெம்மை மிகுதி. நிறைத்திட்டு—எங்கும் தன் வெப்பத்தை நிறையச் செய்து. உளைந்து-கொழுந்துகளை எழுப்பிச் சீறி. உள்புக்கு—உள்ளே புகுந்து. அளைந்து எங்கும் கலந்து. செந்தீ - செந்நிறத்தையுடைய தீ, அழல்—தீயின் கொழுந்து; அதன் வெப்பம் என்றும் சொல்லலாம். ‘அழலை வைத்தாயோ, கைக் கொண்டாயோ’ என்று கூட்டி முடிக்க. நீ எழுவாய். ‘நீ எரிப்ப எழுந்த அழலை வைத்தாயோ, கொண்டாயோ?’ என்று கூட்டுக.]

இறைவன் அழலேந்தி ஆடும் கோலத்தை நினைந்து இவ்வாறு பாடினார்.

அற்புதத் திருவந்தாதியில் 97–ஆவதாக உள்ளது இந்தப் பாட்டு.