பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101. இறைவன் ஊரும் ஏறு


இறைவனுடைய வாகனமாகிய இடபத்தின் வலிமையை எண்ணிப் பார்க்கிறார் காரைக்கால் அம்மையார். அது தர்ம ரிஷபம் என்றாலும் அதற்குக் கோபம் வந்துவிட்டால் அது நடக்கும் முறையே வேறு.

நமக்கு இன்பம் தருவதற்கும் துன்பம் தருவதற்கும் காரணமாக இருப்பது அறம். அதை அறக் கடவுள் என்றே சொல்வார்கள். பாவம் செய்பவர்களை அறம் புறக்கணிக்கும். நல்லவர்களுக்கு இனியதாக இருந்து நலம் செய்யும் அறக் கடவுள் தீயவர்களுக்கு இன்னாததாக நின்று ஒறுக்கும்.

“என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.”

என்பது திருக்குறள். அறம் காய்வதும் உண்டு என்பது அதனால் தெரியவரும்.

அறத்தையே இறைவன் இடபமாகக் கொண்டிருக்கிறான். ஆதலின் அது தீயவர்களைள நடுங்கச் செய்யும் ஆற்றலும் கொண்டது.

இறைவனை நோக்கி அந்த ஏற்றைப் பற்றிய வினாவை விடுக்கிறார் அம்மையார். ‘பொன்னேயொத்த திருமேனியை உடையாய்!’ என்று விலாசம் இடுகிறார்.

பொன்ஒப்பாய்;

“நின் வாகனமாகிய ஏறு எத்தகையது?” என்று கேட்கிறார்.