பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒயில் கும்மி

121

 டியத்திலுள்ள அசைவுகள் பலவற்றை இந்த ஆட்டத்திலே பார்க்கலாம். மிகவும் சிரமமான கரடி வித்தையையும் காணலாம்.

வள்ளியம்மன் ஒயில் கும்மிதான் எல்லோரும் விரும்பும் ஆட்டம். சிறுத்தொண்டன் ஒயில் கும்மி போன்ற மற்ற கும்மிகளும் உண்டு என்றாலும், வள்ளியின் அன்பைப் பரிசோதித்து முருகன் அவளை ஏற்றுக்கொள்ளும் கதைதான் மாறாத இன்பத்தை அளிக்கிறது. இரவு முழுவதும் ஒயில் கும்மி நடைபெறும். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இருந்தாலும் வள்ளி கதையைக் கேட்பதில் மக்கள் சலிப்படைவதில்லை.

ஒயில் கும்மி அடிக்கும் கோஷ்டிக்கு வழக்கமாக ஓர் ஆசிரியர் இருப்பார். அவர்தான் ஆட்ட வகைகளைக் கற்றுக் கொடுப்பவர். அவர் முதலில் பாட்டைத் தொடங்குவார். பிறகு மற்றவர்கள் பாடிக்கொண்டு ஆடுவார்கள். சுமார் பத்து நிமிஷங்களுக்கு ஒரு முறை பாட்டின் சந்தமும் இசையும் மாறும். அவற்றிற்கேற்றவாறு ஆட்டமும் மாறும். பிள்ளையார் வணக்கம் இல்லாமல் கதை தொடங்காது. ஒயில் கும்மியும் பிள்ளையாருக்கு ஒரு ஒயிலான ஆட்டத்தைக் கொண்டிருக்கும். அது கொஞ்சம் வேகமான ஆட்டம். அதற்கான பாட்டைப் பார்க்கலாம்:

அரசரடியில் வீற்றிருக்கும் ஆனைமுகவோனே

அதிரசமும் சர்க்கரையும் இங்கு வைக்கிறோமே

முக்கண்ணன் பெற்றெடுத்த மூஷிக வாகனனே

மோர்க்குழம்பு அப்பளமும் முன்பு வைக்கிறோமே

சொல்லுமிந்தக் கும்மிதனில் சொல்குற்றமிருந்தால்

சுப்ரமண்யர் கதையெனவே சீரியர்கள் பொறுப்பார்

ஆதிதாளத்துடனே ஆரபியும் சொன்னேன்

ஆடிவந்து கையமர்ந்து அசைந்து மெள்ள நில்லும்