பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

காற்றில் வந்த கவிதை


குழந்தையைப் பார்த்துச் சாய்ந்தாடும்படி கூறுவதாக ஒரு பாட்டு வருகிறது.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
கொஞ்சுங் கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு

இதைப் பாடிக்கொண்டு சாய்ந்து சாய்ந்து ஆடுவதில் குழந்தைக்கு அலாதியான ஓர் இன்பம் ஏற்படுகிறது.


நிலாவைப் பார்த்துக் குழந்தை கூவுகிறது; அதைத் தன்னிடம் வரும்படி கைகாட்டி அழைக்கிறது.

நிலா நிலா வா வா
நில்லாமல் ஓடிவா
மலை மேலே ஏறிவா
மல்லிகைப் பூக் கொண்டுவா


நிலாவின் வெண்கற்றைக் கதிர்கள் மல்லிகைப் பூக்களைப் போல இருக்கின்றன. முல்லைககதிர் என்றுகூட அவற்றை வருணிப்பதுண்டு.

இன்னும் சில குழந்தைப் பாடல்கள் கடவுள் வணக்கமாகவும் பக்தியிலே உள்ளத்தைச் செலுத்த உதவுவனவாகவும் இருக்கின்றன. சின்னக் குழந்தைக்கு அபிநயத்தோடு பிள்ளையார் வணக்கம் சொல்லிக் கொடுப்பார்கள்.

குள்ளக் குள்ளனை
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
விநாய கனைத் தொழு.