பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

காற்றில் வந்த கவிதை


இவ்வாறு ஆண்களும் பெண்களும் மாறிமாறிப் பாடுவ தாகப் பாடல்கள் ஆற்றங்கரையில் ஒலிக்கும்.

பிள்ளையார்களை இனி ஆற்றிலே போடவேண்டும். பிள்ளையாரை வழியனுப்பவும் பாடல்கள் உண்டு. மார்கழியிலே பிடித்து வைத்த பிள்ளையார்களை வட்ட வட்டமாகத் தட்டிக் காய வைத்திருப்பார்கள் அல்லவா? அந்தப் பிள்ளையாருக்குப் பாட்டு.


வட்ட வட்டப் புள்ளாரே
வாழைக்காய்ப் புள்ளாரே
உண்ணுண்ணு புள்ளாரே
ஊமத்தங்காய்ப் புள்ளாரே
கண்ணென்று சொல்லட்டுமா
கண்ணான புள்ளாரே
வட்டவட்டப் புள்ளாரே
வாழைக்காய்ப் புள்ளாரே
வார வருஷத்துக்கு
வந்துவிட்டுப் போவாயோ?
போன வருஷத்துக்குப்
போய்விட்டு வந்தாயோ?
வட்டவட்டப் புள்ளாரே
வாழைக்காய்ப் புள்ளாரே
உண்ணுண்ணு புள்ளாரே
ஊமத்தங்காய்ப் புள்ளாரே

இந்தப் பிள்ளையாரை வழியனுப்புவதற்குப் பாடும் பாடலிலே அவர்களுடைய சோகமும் கலந்திருக்கும்,