பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

காற்றில் வந்த கவிதை


என்ன கடைக்குப் போனாளாம்
பூக்கடைக்குப் போனாளாம்
வாடாமல்லிகை ஒருகாசு
வட்டமல்லிகை ஒருகாசு
செண்டுமல்லிகை ஒருகாசு
செவந்திப்பூவும் ஒருகாசு
வாசமல்லிகை ஒருகாசு
மருக்கொழுந்தும் ஒருகாசு
எல்லாங்கூடிக் கணக்குப்பார்க்க
ஒருகாசு மிச்சமிருக்குது

பூவெல்லாம் வாங்கிய பிறகும் ஒரு காசு மீதியிருந்ததாம்! அதை எடுத்துக்கொண்டு அவள் பாத்திரக் கடைக்குப் போகிறாள். அங்கே அவள் வாங்கிய பாத்திரங்களுக்குக் கணக்கே இல்லை. இவ்வளவும் அந்த ஒரு காசில் நடக்கிறது! அது மட்டுமல்ல. எல்லாப் பாத்திரங்களும் வாங்கிய பிறகும் அரைக் காசு மீதியிருக்கிறது! இப்படிப்பட்ட காசு நமக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!


ஒருகாசைக் கொண்டுக்கிட்டு
கன்னாங்கடைக்குப் போனாளாம்
அண்டாப் பானை எடுத்தாளாம்
அடுக்குப் பாத்திரம் எடுத்தாளாம்
குண்டாச்சட்டி எடுத்தாளாம்
குத்துவிளக்கும் எடுத்தாளாம்
சின்னவட்டில் எடுத்தாளாம்
சிப்பிலித்தட்டம் எடுத்தாளாம்
எல்லாங் கூட்டிக் கணக்குப்பார்க்க
அரைக்காசு மிச்ச மிருக்குது