பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலத் தோறும் பெண்

1. அறிமுகம்

'காலந்தோறும்........ பெண்' என்ற தலைப்பில் மக்கள் சமுதாயத்தில் சரிபாதியாக விளங்கும் ஒருபாலரை மையமாக்கி, ஒரு சமுதாய வரலாற்றுப் பின்னணியை ஆராய வேண்டும் என்ற ஓர் உந்துதல் என்னுள் பல நாட்களாகவே முகிழ்த்து, செயலாக்கமாகப் பரிணமித்திருக்கிறது.

படைப்பிலக்கியத் துறையில், முன்பின் என்ற எந்தத் தூலமான தாக்கமும் இருந்திராத நிலையில் தானாகப் பேனாவை எடுத்து விழுந்தும் எழுந்தும் முட்டியும் ஒரு நாற்பதாண்டுக் காலத்தை ஓட்டியிருக்கும் அனுபவம் ஒன்றே என்னுள் முகிழ்த்த உந்துதலுக்கு உரமாகத் துணிவூட்ட இந்தப் புதிய பாதையில் கண்ணணோட்ட-மிடுகிறேன். இது தீர்ந்த ஆராய்ச்சி அன்று எனினும், ஆராய்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பது அவா.

'கதாசிரியர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டு மென்பது அவசியமில்லை; அதுவும் பெண் எழுத்தாளரை அந்த வருக்கத்தில் உட்படுத்த வேண்டியதில்லை!' என்ற ஒரு கருத்து, பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பெண் எழுத்தாளர் மாநாடு ஒன்றில் 'அறிவார்ந்த பெண்கள்' சிலரிடையே விவாதத்துக்குரியதாக அலசப்பட்டது. அதுகாறும், இப்படி ஒரு கருத்து படைப்பிலக்கியக்காரியான என்னுள் வலிமையான தாக்கத்தை உண்டு பண்ணக்கூடும் என்று நான் சிந்தித்திருக்கவில்லை.