33 கால்டுவெல்
தாலமிக்கு முன் தோன்றிய பல கிரேக்க ரோம புவியியல் நூல்களில் ‘கோவில்’ என்ற பெயர் முக்கிய இடம்பெறுகின்றது. தாலமி காலத்தில் ‘கோலிஸ்’ என்பது மறைந்து அதற்குமுன் அறியப்படாத ஒன்றாய் இருந்த ‘கொரி’ என்ற பெயர் ஏற்பட்டது. ‘கோரிஸ், கொரி’ என்னும் இரண்டும் ஒன்றே என்பதிலும், இவை இரண்டும் பாம்பன் தீவின் முனை அல்லது இராமேசுவரம் என்பதையே குறிக்கின்றன என்பதிலும் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. பொருள் தொடர்பை ஒட்டிப் பார்க்கும்போது இது இலங்கைக்கு அருகேயுள்ள இந்தியாவின் முனை என்று பிளினி கூறுகிறார் என்பது தெரிகிறது. இலங்கைக்கும் இந்திய முனைக்கும் இடையே ஆழமற்ற கடலே உள்ளது. இது இந்தியாவின் தென்கோடி முனை என்றும் மதிக்கப்பட்டதால், கன்னியாகுமரியைக் குறிக்குமோ என்ற ஐயம் ஏற்படலாம். ஆனால், தாலமிக்கு முன்பு கன்னியாகுமரி ஒரு நாட்டின் முனையெனக் கருதப்படவில்லை. ஆனால், பம்பானியஸ் மேலா என்பவர், ‘கொலிஸ்’ என்பவன் தேவதூதன் என்று வருணிக்கிறார். இந்திய மொழிகளில் கோலி என்பதற்கும் இதே பொருள்தான் இருக்கிறது. அவர் தென் கடற்கரையின் கிழக்குக் கோடி முடியுமிடமென்று எண்ணுகிறார். அவர் கூற்றின்படி இந்தியாவிலிருந்து கிழக்கே நெடுந்தொலைவு இது பரவியிருந்தது. (மேலுள்ள கால்டுவெல் கருத்துகள் - சிறப்பாகத் தாலமிக்கு முன்பு கன்னியாகுமரி ஒரு நாட்டின் முனையெனக் கருதப்படவில்லை என்ற கருத்து குமரிக்கண்ட மறைவு பற்றிய எண்ணங்கட்கு ஏற்றம் தரவல்லது! - ந.ச.).
கிரேக்கர்கள் கண்ட பாண்டியரும் மதுரையும்
பாண்டிய அரசர்கள் கிரேக்கர்களால் ‘பாண்ட்யன்’ என்று வழங்கப்பட்டார்கள் என்பதை முன்பே கூறியுள்ளேன். அவர்கள் மக்களையும் ‘பாண்ட்யன்கள்’ என்று வழங்கினார்கள். அரசனது பெயராலேயே மக்களும் வழங்கப்பட்டமையால் இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளது சரியானதே. அரசன் பாண்டியன் என்றும் மக்கள் பாண்டியர்கள் என்றும் வழங்கப்பட்டார்கள். மதுரையை ‘மொதெளரா’ என்றும் ‘அரசகம்’ ‘வீரபாண்டியன் நகரம்’, ‘பஸிலியன் பாண்ட்யன்ஸ்’ என்றும் தாலமி குறிப்பிட்டிருக்கிறார். பிளினி மதுரையை ‘மொதுரா’ என்று குறிப்பிடுகிறார். வடமேற்கு இந்தியாவில் கண்ணன் பிறந்த இடமாகிய மதுராவினின்றும் பிரித்துக் காட்டுவதற்காக மதுரையைத் ‘தென் மதுரை’ என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள். கிரேக்கர்கள் இதை ‘மெதேரா’ என்றும், தாலமி ‘கடவுளரின் மெதெளரா’ என்றும் நாகரிக ஆங்கிலத்தில் ‘முத்ரா’ என்றும், குறிப்பிட்டிருக்கிறார்கள். இதே