பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எ. வட இந்திய மொழியினங்கள்


ஆரியர் வருகையால் இந்தியப் பொருநாட்டிற் பண்டு பயின்றிருந்த உள்நாட்டு மொழிகள் பல்வேறு மாறுதல்களை யடைந்தன. அவற்றை யெல்லாம் ஆராய்ந்து சீர்தூக்கி இனம்வகுத்த மேனாட் டறிஞர்கள் ஐம்பெரு மொழியினங் களாக அவற்றைப் பிரித்து முடிவுகட்டினர். ஆரியம், திராவிடம், முண்டா, மான்குமேர், திபேத்தோ-சீனம் என்பனவே அவை. அவற்றுள் மிகவும் தொன்மைவாய்ந்ததாகக் கருதப்படுவது முண்டா மொழியினமே. ஈண்டு ஆரியத்தைப் பற்றிய சில குறிப்புக்கள் தரப்படுகின்றன:

ஆரியம் என்பது, கன்றுகாலிகளை மேய்த்துக்கொண்டு ஊரூராய், நாடு நாடாய்த் திரிதந்து வாழ்க்கையை நடத்தி வந்த ஒரு பெருங்குழுவினரின் திருந்தா மொழியாகும். அக் குழுவினர், பின்னர், வட இந்தியாவினுட் புகுந்து பரந்து தங்கியபோதுதான் அவர்களுடைய மொழியும் திருத்த முற்றுச் சீர்படுவதாயிற்று. அஸ்ஸாமின் கீழைப் பகுதி தொடங்கி பம்பாயை யடுத்த வடகன்னடம் வரை அவர்கள் மொழி பெருகியும் அருகியும் வழங்குவதாயிற்று. தாந்தாம் உறையு மிடங்களிலிருந்த பண்டைய இந்திய மக்களுடன் கலந்து உறவாடிய முறையில் அவர்கள் தங்களுடைய குழூஉச் சிறப்பியல்புகளை ஒருவவிட்டுவந்தாலும், தங்கள் மொழிப்பற்றை மட்டும் அவர்கள் கைவிட்டதில்லை. அதனால், அவ்வத் தொன்மக்களுடைய சொந்த மொழிகள் வழக்கிழந்து போக, இவ்வாரிய மக்கள்தம் மொழியே மேம் பாடுறுவதாயிற்று. திருந்திய ஓர் ஆரிய மொழியுடன் பண்டைய இந்திய உள்நாட்டு மொழி யொன்று தொடர்புற்றுக்