பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

11


வருகின்ற விளக்கம் சரியில்லாத காரணத்தால் இக்கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படாத தோடு, கால் பந்தாட்டப் பிறப்புக்கும் சரியான சான்றாக எடுபடாமல் போய்விட்டது.

ஆதாரம் என்று ஆராய்கிற பொழுது, இங்கிலாந்தில் இருந்து தான் இந்த ஆட்டம் வளர்ந்திருக்கிறது என்பதற்கு பலர் நம்பத் தகுந்த சான்றுகளைக் காட்டுகின்றனர்.

இங்கிலாந்தே இதன் தாயகம்

டென்மார்க் நாட்டினன் ஒருவனின் அறுபட்ட தலையை ஆத்திரத்தில் எத்திய நிகழ்ச்சியே இம்மாதிரி விளையாட்டாக மாறியது என்றும்; கி.பி.217ஆம் ஆண்டு, ரோமை வென்ற இங்கிலாந்து மக்கள் வெற்றிகரமாகக் கொண்டாடிய விழாவே இவ்விளையாட்டின் தொடக்கம் என்றும் கூறுவர் சரித்திர ஆசிரியர்கள்.

புதை பொருள் ஆராய்ச்சிக்காக நிலத்தைத் தோண்டும்போது கிடைத்த மண்டை ஒட்டை டென்மார்க்கு நாட்டினன் ஒருவனது தலையாக இருக்கும் என்ற கற்பனையில் மண்டை ஒட்டை உதைக்கப்போய், மக்களிடம் இந்த விளையாட்டில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் பெருகிவிட்டது என்பது ஆதாரமுள்ள வரலாறு.

நாடு முழுவதும் இந்த மண்டை ஒட்டை உதைத்தாடும் ஆட்டம் ஆடப் பெறவே, இதன் பெயரே ‘டேன் தலையை எத்துதல்’ (Kicking the Dane‘s Head) என்று 12ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தது. மண்டை ஒடு தோல் பையாக மாறி ’தோல் பையை உதைத்தல்' என்ற பெயரோடு மாறி பிற்காலத்தில் விளையாடப் பெற்றது.