பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க்கேசிகன்

3


'கூட்டுச் சரக்கு எது?

'அதி மதுரக் கவிராயர் பராக்' என்று கூறியபடி கட்டியத்துடன் செல்லும் புலவரை நோக்கி, அவரை ஏளனஞ் செய்து கூறியது இச்செய்யுள். "பிற சரக்குகளோடு கூட்டினாலன்றிப் பயன்படுவதல்லவே அதிமதுரம்! - எதனோடு கூடியதால் உமக்கிந்தச் சிறப்பும் செல்வாக்கும் ஏற்பட்டது?" என வினவுகிறார் கவிஞர். இதனால் திருமலைராயனின் தயவினாலேயே அவருக்கு அந்தத் தகுதி உண்டானதே அல்லாமல், உண்மையாக அவர் அத்தகுதிக்கு உரியவரல்லர் எனப் பழித்ததும் ஆகும்.

அதிமதுரமென்றே அகில மறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்-புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்கு
கூட்டுச் சரக்கதனைக் கூறு.(3)

அகிலம் அறிய அதிமதுரம் என்றே துதி மதுரமாய் எடுத்துச் சொல்லும் புதுமை என்ன? - உலகத்தார் எல்லாரும் அறியும்படியாக அதிமதுரம் என்ற போற்றுதலை இனிதாக எடுத்துக் கூறுகின்ற இந்தப் புதுமைதான் என்னவோ? காட்டுச்சரக்கு, உலகிற் காரமில்லாச் சரக்கு, கூட்டுச் சரக்கு, அதனைக் கூறு - அதிமதுரம் என்பது ஒரு பகட்டான சரக்கு, இந்த உலகத்திலே காரம் கொஞ்சமும் இல்லாத சரக்கும் அது. (அதற்கு இத்துணைச் சிறப்பு இங்கே என்றால்) அதனைத் தருமாறு அதனுடன் சேர்த்த சரக்குதான் யாதோ? அதனை எமக்குக் கூறுவீராக.

காட்டுச்சரக்கு காட்டிலிருந்து கிடைக்கும் சரக்கும் ஆம். காரம் - தனிக்குணம், அதாவது பயன்படும் தன்மை 'தற்புகழ்ச்சி வேண்டாமை' புலவர்தம் இயல்பு. அதற்கு மாறுபட்டது அதிமதுரத்தின் செயல்; அதனால் புதுமை என்றனர். 'கூட்டுச் சரக்கு' என்றது, திருமலைராயனின் அரசவைப் புலவர் குழுவின் தலைவர் என்பதனைச் சுட்டியதாம்.

காளமேகம் யானே!

அதிமதுரக் கவியும் பிறரும் காளமேகத்தின் கவித்துடுக்கைக் கண்டு ஆத்திரம் கொண்டனர். நீவிர் யாவரோ?' என அவர்கள் கேட்கத் தம்மை இவ்வாறு அவர்கட்கு அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். இது, மன்னவனின் அவையிலே நிகழ்ந்தது ஆகலாம்.

தூதஞ்சு நாழிகையி லாறுநா ழிகைதனிற்
சொற்சந்த மாலை சொல்லத்
துகளிலா வந்தாதி யேழுநா ழிகைதனிற்
றொகைபட விரித்து ரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனிற்
பரணி யொரு நாண்முழுவதும்