பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்




பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
பகரக்கொ டிகட்டி னேன்
சீதஞ்செ யுந்திங்கண் மரபினா னீடுபுகழ்
செய்யதிரு மலரா யன்முன்
சீறுமா றென்றுமிகு தாறுமாறுகள்செய்
திருட்டுக் கவிப்புலவ ரைக்
காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்
கதுப்பிற் புடைத்து வெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு
கவிகாள மேகம் நானே.(4)


தூது அஞ்சு நாழிகைகளில் சொற்சந்த மாலை ஆறு நாழிகைதனில் சொல்ல-தூது என்னும் வகைப் பிரபந்தத்தை ஐந்து நாழிகைகட்கு உள்ளாகவும், சொல்லப்படும் சந்தமாலை என்பதனை ஆறு நாழிகைகட்கு உள்ளாகவும் சொல்லவும்;

துகள் இலா அந்தாதி ஏழு நாழிகைதனில் தொகைபட விரித்து உரைக்க - குற்றமற்ற அந்தாதி வகைகளை ஏழு நாழிகைப் பொழுதிலே, அவை தொகைப்பட்டு வருமாறு விரிவாக உரைக்கவும்;

பாதம்செய் மடல் கோவை பத்து நாழிகைதனில் பரணி ஒரு நாள் முழுவதும், பார காவியம் எல்லாம் ஒரிரு தினத்திலே பகர - பகுதிப்படச் செய்வனவான மடல் கோவை ஆகியனவற்றைப் பத்து நாழிகைகட்குள்ளாகவும், பரணியை ஒரு நாள் முழுவதற்குள்ளாகவும், பெரிய காவியங்களை எல்லாம் ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவும் சொல்வதற்கும்;

கொடி கட்டினேன் விருதுக்கொடி கட்டி வந்துள்ளேன் யான்.

சீதஞ்செய் திங்கள் - மரபினான் நீடுபுகழ்திருமலைராயன் முன் - குளிர்ச்சி செய்யும் சந்திரனின் மரபினனும், நெடிதான புகழினை உடையோனும், செங்கோன்மையாளனுமான திருமலை ராயன் என்னும் இம்மன்னவனின் முன்பாக, சீறுமாறு என்று மிகு தாறுமாறுகள் செய் திருட்டுக்கவிப் புலவரை - சீற்றமென்றும் மாற்றம் என்றும் மிகுதியாகத் தாறுமாறான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்ற திருட்டுத்தனம் உடைய கவிராயரான புலவர்களாவோரை; காதங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக் கதுப்பிற்புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளம் இட்டு ஏறும் - இவ்விடத்தே கர்துகளை அறுத்தும், சவுக்கினாலே அடித்தும், கன்னங்களிற் புடைத்தும், என் வெற்றியாகிய கல்லான சேணத்துடனே, கொடிய கடிவாளத்தை இட்டும், அவர்கள் மீது ஏறிச் செலுத்தும்; கவி காளமேகம் நானே - கவிஞனாகிய காளமேகம் என்பவன் நானேதான்.