பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


தமிழ் மொழி இனிமை வாய்ந்தது. "இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்பட வரும் "தமிழ் தழீஇய சாயலவர்” என்ற தொடரில் வரும் "தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்க தேவர்.

இனிய சொற்களைத் தேர்ந்து, இனிமையாகச் சொல்லாட விரும்பியவர் தமிழர்; தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும், இனிமையுடையவாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும். எனவும் விரும்பினார்கள். அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடையவாகும்.

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்றார் ஒரு பெரியார்; தமிழர் வாக்கு இனிமை வாய்ந்தது. இது உண்மை என்பதைப் பழந்தமிழ்ப் பாக்கள் காட்டும் படப்பிடிப்பினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார் அனைவரும் உணர்வர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் பழம்பெரும் மூதாதையர்தம் பண்பாட்டுப் பெருமையினை, இன்றைய தமிழரும் பிறரும் அறிந்துகொள்ளுதல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக அக்காலப் புலவர்கள் ஆயிரமாயிரம் பாக்களைப் பாடிச் சென்றார்கள். ஆனால், அவர்கள் பாடிச்சென்ற அப்பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறி விட்டனர், விழிப்புணர்வு அற்ற நம்மவர் சிலர்; என்றாலும், விழிப்புணர்வோடு